நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு: ராமதாஸ் கோரிக்கை
சென்னை: நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் வன்னிய சமுதாயம் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் பேசிய ராமதாஸ், நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படையான அணுகுமுறை வேண்டும். எந்த அடிப்படையில் நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது என்பதை தமிழக அரசும், உயர் நீதமன்றமும் விளக்க வேண்டும்.
நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு வேண்டும். அந்த அடிப்படையில் வன்னியர்கள் 15 பேரை நீதிபதிகளாக நியமிக்க வேண்டும். ஆனால் தற்போது வன்னியர் இனத்தை சேர்ந்த ஒருவர் தான் நீதிபதியாக இருக்கிறார்.
சாதி ஒழிந்த மாதிரி பேசுகிறார்கள். எங்கே சாதி ஒழிந்தது?. எல்லா இடங்களிலும் சாதி இருக்கிறது. இதை மறுக்க முடியுமா?
எல்லாவற்றிலும் கிரிமிலேயரை பின்பற்றும் போது நீதிபதிகள் நியமனத்தில் கிரிமிலேயர் பின்பற்றக்கூடாதா?. முதல்வரே கொஞ்சம் எங்களுக்காகவும் வாதாடுங்கள்.
நம்முடைய வக்கீல்கள் நீதிமன்றத்தை புறக்கணிக்காமல் நீதிமன்றத்தின் உள்ளேயும், வெளியேயும் போராட்டத்தை தொடங்க வேண்டும். நம்முடைய கோரிக்கையை புரிய வைக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications