அறுவை சிகிச்சையின் போது அலட்சியம்-டாக்டருக்கு அபராதம்
கரூர்: பிரசவ அறுவை சிகிச்சையின் போது அலட்சியாமாக செயல்பட்ட டாக்டர், பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு, ரூ 4 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க கரூர் நுகர்வோர் குறைதீர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் செந்தில்குமார் மனைவி தேவி. இவர் கடந்த 2004 ல் கர்ப்பமான போது, கரூர் பிருந்தா மருத்துவமனையில் 2004 ஏப்ரல் 19 ம் தேதி "ஸ்கேன்' செய்து பார்த்த போது, குழந்தை நன்றாக உள்ளதாக மருத்துவ மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, பிரசவத்துக்கு கரூர் லோகா மருத்துவமனையில் கடந்த 2004 மே 8 ம் தேதி உள்நோயாளியாக சேர்ந்தார். அடுத்த நாள் "ஸ்கேன்' செய்யப்பட்டு, உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க டாக்டர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, அறுவை சிகிச்சைக்கான படிவங்களில் மருத்துவ மனை நிர்வாகியும் டாக்டருமான செந்தில்குமாரிடம் கையொப்பம் பெறப்பட்டு, குழந்தை வெளியெடுக்கப்பட்டது.
ஆனால், பிறந்த ஆண் குழந்தையின் இடது கை தோள்பட்டை எலும்பு முறிந்துள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.
2004 மே 18 ம் தேதி, லோகா மருத்துவமனையிலிருந்து "டிஸ்சார்ஜ்' ஆனதும், கோவை கங்கா மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க செந்தில்குமார் சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், பிரசவ அறுவை சிகிச்சையின் போது தவறாக கையாண்டதால் குழந்தையின் எலும்பு முறிவு ஏற்பட்டதாக சான்று அளித்தனர்.
இதநால், அதிர்ச்சி அடைந்த தேவி, கரூர் நுகர்வோர் குறைதீர் நீதிமன்றத்தில் 2007 பிப்ரவரி 14 ம் தேதி வழக்கு பதிவு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ராமகிருஷ்ணன், உறுப்பினர்கள் ஜாபருல்லா, மேகலா ஆகியோர் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோருக்கு 4 லட்சம் ரூபாய் நஷ்டஈடு, ரூ 2,000 வழக்கு செலவு ஆகியவை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறினர்.












Click it and Unblock the Notifications