ராஜராஜ சோழனின் செப்புச் சிலையை திருப்பித் தருமா குஜராத் பவுண்டேஷன்?
பெரிய கோவில் எனப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலைக் கட்டிய பெருமைக்குரியவர் ராஜராஜ சோழன். அருண்மொழித் தேவன் என்ற இயற் பெயரைக் கொண்ட இவர் ராஜராஜன் என்ற சிறப்புப் பெயருடன் சோழ மண்டலத்தை ஆண்ட மாமன்னன். இவருடைய காலத்தில் சோழ நாடு சீருடனும், செழிப்புடனும் விளங்கியது.
கி.பி.1014ம் ஆண்டு வரை ராஜராஜசோழனின் ஆட்சி கொடி கட்டிப் பறந்தது. அக்கால தமிழர்களின் கட்டடக் கலை நயத்தை இன்றளவும் பட்டொளி வீசிப் பரவச் செய்து கொண்டிருக்கும் பெரிய கோவிலை 1004ம் ஆண்டு தொடங்கி 1010ம் ஆண்டுக்குள் கட்டி முடித்த சாதனையாளர்.
பெரிய கோவில் கட்டப்பட்டு ஆயிரமாண்டுகள் ஆவதையொட்டி தஞ்சையில் தமிழக அரசு பெரிய விழா எடுக்கவுள்ளது. இந்த சமயத்தில் குஜராத்தில் உள்ள காலிகோ மியூசியத்தில் உள்ள ராஜராஜனின் செப்புச் சிலையை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.
பெரிய கோவிலை கட்டும் பொறுப்பை ராஜராஜப் பெருந்தச்சனிடம் ஒப்படைத்தார் ராஜராஜ சோழன். இதற்கு நன்றி கூறும்வகையில் மன்னன் ராஜராஜன், அவரது மனைவி லோகமாதேவி ஆகியோரது செப்புச் சிலைகளை வடித்தார் பெருந்தச்சன்.
ராஜராஜ சோழனின் 3 செப்புச்சிலைகளை உருவாக்கிக் கொடுத்தார் தச்சன்.இந்த சிலைகளை பெரியகோவிலில் நிர்மானித்தனர். பின்னர் காலத்தின் கோலமாய் அன்னியர் படையெடுப்பின்போது ராஜராஜனின் சிலை சூறையாடப்பட்டு களவாடப்பட்டு விட்டது.
இந்த சிலை பின்னர் அகமதாபாத்தில் காலிகோ அருங்காட்சியகத்தை நடத்தி வரும் சாராபாய் பவுண்டேஷன் வசம் போனது. இந்த சிலையைத்தான்தற்போது மீட்க கோரிக்கை எழுந்துள்ளது.
இதையடுத்து தமிழக அரசு சிலையை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. முதலில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். தற்போது நேரடியாக அருங்காட்சியக நிர்வாகிகளுடன் தமிழக அரசு பேச முடிவு செய்துள்ளது.
இதற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு, சுற்றுலாத்துறை செயலாளர் இறையன்பு, தொல்பொருள் ஆய்வாளர் நாகசாமி, வரலாற்று ஆய்வாளர் குடவாசல் பாலசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய குழு அகமதாபாத் சென்று பேசவுள்ளது.













Click it and Unblock the Notifications