பஸ் வசதியில்லை-3 கிலோமீட்டர் நடை-பரிதவிக்கும் கிராமங்கள்
நெல்லை: பஸ் வசதியில்லாததால், 3 கிலோமீட்டர் தொலைவை நடந்தே கழித்து வருகின்றனர் நான்கு கிராம மக்கள்.
நெல்லை-நாகர்கோவில் நெடுஞ்சாலையில் மூன்றடைப்பு அருகே 3 கிமீ தூரத்தில் தெற்கு பத்தினிப்பாறை, உலகம்மாள்புரம், தோப்பூர், வடக்கு பத்தினிப்பாறை ஆகிய 4 கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளை சேர்ந்த மக்கள் வெளியூருக்கு செல்ல 3 கிமீ தூரம் நடந்து மூன்றடைப்பு சென்று பஸ் ஏற வேண்டும்.
இப்பகுதியில் வசிக்கும் பள்ளி, மாணவ, மாணவிகள் சுமார் 5 கிமீ தூரம் நடந்து மருதகுளம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர். இக்கிராமங்களுக்கு இதுநாள் வரை டவுன் பஸ் வசதி இல்லை.
மாணவ, மாணவிகள் அரசின் இவலச பஸ் பாஸ் திட்டத்தின் பயன்களை பெற முடியவில்லை. பெண்கள், நோயாளிகள், பீடி சுற்றுபவர்கள், பள்ளி மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பஸ் வசதியில்லாமல் அவதிப்படுகின்றனர்.
எனவே போக்குவரத்து கழக அதிகாரிகள் 4 கிராமங்களுக்கும் டவுன் பஸ் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.