பிரம்மோஸ் ஏவுகணை ஏவி பரிசோதிக்கப்பட்டது
பாலசோர் (ஒரிசா): 290 கிலோமீட்டர் தூரம் போய் தாக்கும் பிரம்மோஸ் அதி நவீன ஏவுகணை இன்று ஏவி பரிசோதிக்கப்பட்டது.
ஒரிசா மாநிலம் சந்திப்பூர் கடல் பகுதியில் இந்த சோதனை நடைபெற்றது.
இதுகுறித்து டிஆர்டிஓ அதிகாரிகள் கூறுகையில், இன்று காலை 11.35 மணியளவில் ஒருங்கிணைந்த ராக்கெட் ஏவுதளத்திலிருந்து பிரம்மோஸ்-2 ஏவி சோதிக்கப்பட்டது. பாதுகாப்புப் படையினருக்கான சோதனை இது.
குறிப்பிட்ட இலக்குகளை குறி வைத்து துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது பிரம்மோஸ். குறிப்பாக, தீவிரவாத முகாம்களை மட்டும் குறி வைத்துத் தாக்கக் கூடிய வகையிலான திறமை படைத்தது. குறிப்பிட்ட இலக்குக்கு மட்டும் பெரும் சேதத்தையும், பிற பகுதிகளுக்கு சேதம் ஏற்படுத்தாத வகையிலும் இதன் தாக்குதல் திறன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒலியை விட 2.8 மடங்கு வேகமாக செல்லக் கூடிய திறன் படைத்த ஏவுகணை இது. 300 கிலோ வரையிலான வெடிகுண்டுகளை சுமந்து செல்லும்.
நிலம், நீர், ஆகாயம் என மூன்று மார்க்கங்களிலிருந்தும் ஏவக் கூடிய வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விரைவில் வான் மற்றும் நீர் மார்க்கங்களில் இது சோதிக்கப்படவுள்ளது என்றனர்.