கடையநல்லூர் அருகே மினரல் வாட்டர் கம்பெனி்க்கு இடைக்காலத் தடை
கடையநல்லூர்: கடையநல்லூர் அருகே மினரல் வாட்டர் கம்பெனி செயல்பட உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வள்ளியம்மாள்புரத்தைச் சேர்ந்த கணேசன் உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
வள்ளியம்மாள்புரத்தில் 250 குடும்பங்கள் வசிக்கின்றன. 280 ஏக்கர் விளை நிலங்கள் உள்ளன. இங்கு 7 ஏக்கரில் மினரல் வாட்டர் கம்பெனி அமைக்கப்பட்டுள்ளது. 850 அடிக்கு போர்வெல் போடப்படுகிறது. மினரல் வாட்டர் தயாரிப்புக்காக போர்வெல் போட்டு தண்ணீர் எடுக்கப்படுவதால் வள்ளியம்மாள்புரம் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மினரல் வாட்டர் கம்பெனிக்கு அனுமதி வழங்கக் கூடாது என அரசுக்கு உத்தரவிட வேண்டும். கம்பெனி செயல்பட தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.ஜெயபால் மினரல் வாட்டர் கம்பெனி செயல்பட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.