ஆசிரியர்கள் நலமோடும், வளமோடும் வாழ வேண்டும்-கருணாநிதி வாழ்த்து
ஆசிரியர் தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் பிறந்த செப்டம்பர் திங்கள் 5-ம் நாள், ஆண்டுதோறும் ஆசிரியர் தினம்'' எனக் கொண்டாடப்பட்டு, அந்நாளில் சீரிய முறையில் கல்வித் தொண்டுகளாற்றிவரும் ஆசிரியப் பெருமக்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கப் பரிசுடன் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது'' வழங்கப்பட்டு வருகிறது.
அண்ணா, ஆசிரியர்கள் ஏங்கினால் வகுப்பறைகள் தேங்கும்'' என்றார். இந்த அருள்மொழியைக் கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் பெறும் உயர்கல்விக்கு ஊக்க ஊதியம், ஈட்டிய விடுப்பை ஒப்படை செய்து பணப்பயன், முழு ஓய்வூதியம் பெற 30 ஆண்டுகள் பணி போதும்; ஆசிரியப் பயிற்சி பெற்றுப் பல ஆண்டுகளாக வேலைவாய்ப்பின்றி வாடிய இளைஞர்கள் வாழ்வில் வளம்பாய்ச்சிடும் நோக்கில் வேலைவாய்ப்புப் பதிவு முன்னுரிமைப்படி அவர்களுக்கு ஆசிரியர் வேலை வழங்கப்படுமென அறிவித்து, 2006-க்குப்பின் இதுவரை ஏறத்தாழ 80 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் புதிதாகப் பணிநியமனம்;
ஒப்பந்தமுறை நியமனத்தில் குறைந்த ஊதியத்துடன் மிகுந்த சிரமங்களோடு பணியாற்றிய 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்று வந்த ஊதியம் போல் ஏறத்தாழ மூன்று மடங்கிற்கும் மேலாக ஊதியம் பெற்றிட 1.6.2006 முதல் அவர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம்; பணியிட மாறுதல்களில் எந்த வித ஒளிவு மறைவுமின்றி கலந்தாய்தல் மூலம் ஆசிரியர்களுக்கு அவர்கள் விரும்பும் இடங்களில் மாறுதல் ஆணைகள் - என இந்த அரசு ஆசிரியர் சமுதாயம் நலம் பெறப் பல்வேறு சலுகைகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது.
தமிழக அரசின் இத்தகைய அரிய பல திட்டங்களால் ஆசிரியர்கள் மகிழ்வோடு பணி புரிந்துவரும் வேளையில் கொண்டாடப்படும் இந்த ஆண்டின் ஆசிரியர் தினவிழா சிறப்புடன் நிகழ - ஆசிரியப் பெருமக்கள் தங்கள் குடும்பத்துடன் வளமாகவும், நலமாகவும் வாழ எனது உளமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் உரித்தாகுக என்று தெரிவித்துள்ளார்.