தமிழக எதிர்க்கட்சிகள் ஒரே அணியில் திரள வேண்டும்: பாஜக
சென்னை & காந்திநகர்: திமுக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரண்டு சட்டமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதற்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். நாட்டு நலம், மக்கள் நலன் தான் பாஜகவின் குறிக்கோள்.
நாங்கள் ஓட்டு வங்கியை குறிவைத்து ஒருபோதும் செயல்பட்டதில்லை, செயல்படவும் மாட்டோம்.
கல்வி உதவித் தொகை வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதை எதிர்க்கிறோம். சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்குவது போல் இந்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் பாஜகவின் பலம் அதிகரித்துள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் சட்டசபைக்குள் நுழைந்தே தீருவோம்.
கூட்டணி பற்றிய முடிவுகள் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் உறுதியாகும்.
விலைவாசி உயர்வு, மின் தட்டுப்பாடு உள்பட பல்வேறு பிரச்சனைகளில் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளார்கள்.
இந்த நேரத்தில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் திரண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்பது பாஜகவின்வின் விருப்பம்.
எங்களை பொறுத்த வரை கூட்டணி அமைந்தாலும் சரி, அமையாவிட்டாலும் சரி தனித்து நின்றாலும் வெற்றி பெறும் வகையில் கட்சியை பலப்படுத்துவோம் என்றார்.
பிரதமர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை-மோடி:
இந் நிலையில் குஜராத் தலைநகர் காந்தி நகரில் ஆசிரியர் தினத்தையொட்டி நடைபெற்ற விழாவில் பேசிய அம் மாநில முதல்வர் நரேந்திர மோடியிடம், மாணவர் ஒருவர், பிரதமர் பதவிக்கு நீங்கள் போட்டியிடுவீர்களா? என்று கேட்டார்.
அதற்கு பதிலளித்த மோடி, பிரதமர் பதவிக்கு பல தலைவர்களுடைய பெயர்கள் பேசப்பட்டு வருகின்றன. சரத் பவார் அடுத்த பிரதமர் ஆகிறார் என்று தகவல் வெளியாகி வருகிறது.
அதேபோல மாயாவதி, நிதிஷ்குமார் பெயர்களும் பிரதமர் பதவிக்கு பேசப்பட்டு வருகின்றன.
ஆனால், என்னைப் பொருத்தவரை பிரதமர் பதவிக்கு போட்டியிட நான் விரும்பவில்லை. மாறாக, 5.5 கோடி குஜராத் மக்களுக்கு சேவை செய்யவே விரும்புகிறேன். குஜராத் மக்களுக்கு சேவை செய்வது, இந்த நாட்டுக்கு செய்யும் சேவைதான் என்றார்.












Click it and Unblock the Notifications