நக்ஸல்களால் கடத்தப்பட்ட 3 போலீசார் பத்திரமாக வந்து சேர்ந்தனர்
பாட்னா: பிகார் மாநிலம் லக்கிசரை வனப் பகுதியில் கடந்த மாதம் 29ம் தேதி மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 7 போலீசார் கொல்லப்பட்டனர். சப்- இன்ஸ்பெக்டர்கள் லூகாஸ் டேட, அபய் பிரசாத் யாதவ், போலீஸ்காரர்கள் ரூபேஷ் குமார், இஷான் கான் ஆகியோரை மாவோயிஸ்ட்டுகள் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.
சிறையில் இருக்கும் தங்கள் இயக்கத்தை சேர்ந்த 8 பேரை விடுவித்தால் தான் இவர்களை விடுவிபோம், இல்லாவிட்டால் கொல்வோம் என்று மாவோயிஸ்டுகள் நிபந்தனை விதித்தனர்.
அவர்களது கோரிக்கை ஏற்கப்படாததால் சப்- இன்ஸ்பெக்டர் லூகாஸ் டேட்டை மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொன்றனர். மற்ற 3 பேரையும் கொல்லப் போவதாக அறிவித்தருந்தனர்.
இதையடுத்து மாவோயிஸ்டுகளுடன் பேச்சு நடத்தத் தயார் என்று பிகார் அரசு அறிவித்தது. மேலும் அவர்களை விடுவிக்கக் கோரி சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்ட சமூக நலவாதிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதை ஏற்று மூவரையும் மாவோயிஸ்டுகள் நேற்று முன்தினம் விடுவித்ததாக மாவோயிஸ்டுகள் அறிவித்தனர். ஆனால், அவர்கள் நேற்றிரவு வரை வந்து சேராததால் அவர்களது கதி குறித்து பெரும் சந்தேகம் நிலவியது.
இந் நிலையில் இன்று காலை கஜ்ரா-சனான் காட்டு எல்லைப் பகுதியில் லகோசக் என்ற இடத்தில் மூன்று பேரையும் மாவோயிஸ்டுகள் விட்டு சென்றனர். அவர்கள் போலீஸ் முகாமுக்கு வந்து சேர்ந்தனர்.
3 பேரும் நலமுடன் இருப்பதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். மூவரும் முதல்வர் நிதிஷ் குமாரை சந்திக்க பாட்னாவுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இதன்மூலம் பிகாரில் கடந்த 9 நாட்களாக நிலவி வந்த பெரும் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ளது.
3 பேரும் விடுதலையாகிவிட்ட நிலையில் அந்தக் காட்டுப் பகுதியை அதிரடிப்படை போலீசார் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டாயில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் நக்ஸல் கமாண்டர் ஒருவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிகார் போலீஸ் டி.ஜி.பி. நீல்மணி தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாவோயிஸ்டுகள் தலைவர் ஒருவர் நேற்று அதிகாலை சப்- இன்ஸ்பெக்டர் அபய் யாதவின் வீட்டுக்கு வந்து அவருடைய மனைவியை சந்தித்து 3 போலீசாரும் விடுவிக்கப்படுவர் என்று உறுதியளித்துவிட்டுச் சென்றார். அவருக்கு யாதவி்ன் மனைவி ராக்கி கயிறு கட்டு தனது நன்றியைத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications