பிகார் சட்டமன்றத்துக்கு 6 கட்டமாக ஒரு மாதம் தேர்தல்!

இத் தகவலை டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.
மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கும் அக்டோபரில் 21ல் ஆரம்பித்து நவம்பர் 20ம் தேதி வரை கிட்டத்தட்ட 1 மாத காலம் நடக்கவுள்ளது.
முதல் கட்டத் தேர்தல் அக்டோபர் 21ம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் 24ம் தேதியும், 3ம் கட்டத் தேர்தல் 28ம் தேதியும், 4ம் கட்டத் தேர்தல் நவம்பர் 1ம் தேதியும், 5ம் கட்டத் தேர்தல் 9ம் தேதியும், இறுதிக் கட்டத் தேர்தல் நவம்பர் 20ம் தேதியும் நடக்கிறது.
தேர்தலில் முழுக்க முழுக்க மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களே பயன்படுத்தப்படவுள்ளன.
பிகாரில் வழக்கமாகவே சட்டம் ஒழுங்கு படு மோசம். இதில் நக்ஸல்கள் பிரச்சனையும் சேர்ந்துவிட்டது. இதனால் ஒரே கட்டமாகத் தேர்தலை நடத்த முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது.
மாநில போலீஸார் தவிர மத்திய துணை ராணுவப் படையினரின் பாதுகாப்போடு தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலை உள்ளது.
படையினரை இடம் மாற்றி, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து, தேர்தலை உரிய முறையில் நடத்த வசதியாக வாக்குப் பதிவு 6 கட்டமாக பிரிக்கப்பட்டுவிட்டுள்ளது.
மாநிலத்தில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஏகப்பட்ட முட்டல், மோதல்கள் இருந்தாலும் வரும் தேர்தலிலும் இந்தக் கூட்டணி தொடர்கிறது. தேர்தல் பிரச்சாரத்துக்கு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பாஜக எம்பி வருண் காந்தி வரக் கூடாது என்ற நிபந்தனையுடன் இந்த முறை கூட்டணியை அமைத்துள்ளனர் நிதிஷ் குமாரும் ஐக்கிய ஜனதா தளத் தவைவர் சரத் யாதவும்.
அதே போல கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்தனியே போட்டியிட்டு மண்ணைக் கவ்விய லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், ராம் விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன் சக்தியும் இம்முறை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
கடந்த மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது தனக்குக் கிடைத்த ஓட்டு சதவீதத்தால் தெம்பாகிவட்ட காங்கிரஸ் இந்தத் தேர்தலிலும் தனித்தே போட்டியிடுகிறது.
இது பாஜக-ஐக்கிய ஜனதா தளத்துக்கே சாதகமாக அமையும் என்பதால் எப்படியாவது காங்கிரஸை கூட்டணிக்குள் இழுக்க லாலு கடுமையாக முயன்று வருகிறார். ஆனால், கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு வெறும் 2 இடம் தருவதாகச் சொல்லி இவர் கேவலப்படுத்தியதை அந்தக் கட்சி மறக்கவில்லை. இதனால் லாலுவுடன் கூட்டணியே வேண்டாம், தனித்து போட்டியிட்டு எத்தனை இடத்தில் வென்றாலும் பரவாயில்லை என்ற முடிவில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி உள்ளார்.
இதனால் லாலு தடுமாற்றத்துடன் தான் தேர்தலை சந்திக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிற்படுத்தப்பட்ட குர்மி சமுதாயத்தைச் சேர்ந்தவரான நிதிஷ் குமாருக்கு யாதவர்கள் தவிர்த்து பிற பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர், முஸ்லீம்கள், பிராமணர்கள், தலித்கள் ஆகியோரின் ஆதரவு கிடைத்ததால் தான் கடந்த முறை ஆட்சிக்கு வர முடிந்தது. இப்போதும் இவர்களது ஆதரவு தன்னை கரையேற்றிவிடும் என்ற நம்பிக்கையில் உள்ளார் நிதிஷ்.












Click it and Unblock the Notifications