மர்ம கும்பலால் தாக்கப்பட்ட நீச்சல் வீரர் பாலகிருஷ்ணன் ஸ்டாலினிடம் புகார்
: சென்னையில் நேற்று மர்மக் கும்பலால் தாக்கப்பட்ட நீச்சல் வீரர் எம்.பி.பாலகிருஷ்ணன், இதுகுறித்து துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை அமைந்தகரையை அடுத்த செனாய் நகர் ஜெயலட்சுமி காலனியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (21), கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 3ம் ஆண்டு என்ஜினியரிங் படித்து வருகிறார்.
இந்தியாவிலேன் முன்னணி நீச்சல் வீரர் இவர். தேசிய அளவில் பல சாதனைகளைப் படைத்தவர். காமன்வெல்த் போட்டிக்கும் இவர் தேர்வாகியுள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலை தனது வீட்டிலிருந்து பயிற்சிக்காக அவர் சென்று கொண்டிருந்தார். அப்போது செனாய் நகர்8வது குறுக்குத் தெருவில் வந்தபோது 2 பேர் ஓடி வந்து பாலகிருஷ்ணனை சரமாரியாக கிரிக்கெட் ஸ்டெம்புகளால் தாக்கி விட்டு ஓடி விட்டனர்.
இதனால் படுகாயமடைந்த பாலகிருஷ்ணனை அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இந்த நிலையில் இன்று காலை பாலகிருஷ்ணனுக்குப் பாராட்டு விழா நடந்தது. அதில் அவர் காயத்துடன் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சான்றிதழ் அளித்தார். அப்போது ஸ்டாலினிடம் தன் மீது நடந்த தாக்குதல் குறித்து புகார் அளித்தார் பாலகிருஷ்ணன்.
ஊக்க மருந்து பயன்படுத்திய 2 நீச்சல் வீராங்கனைகள் நீக்கம்:
இதற்கிடையே ஊக்க மருந்து பயன்படுத்தியதாக பிடிபட்ட 2 இந்திய நீச்சல் வீராங்கனைகள் காமன்வெல்த் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் 64வது தேசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சமீபத்தில் சர்வதேச ஊக்கமருந்து சோதனை மையம் (டபிள்யு.ஏ.டி.ஏ.) சார்பில் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் ரிச்சா மிஸ்ரா, ஜோட்சனா பான்சாரே, அமர் முரளிதரன் ஆகியோர் ஊக்க மருந்து பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.
ரிச்சா மிஸ்ரா, ஜோட்சனா பான்சாரே ஆகிய இருவரும், வரும் அகடோபர் 3ந் தேதி துவங்கும் காமன்வெல்த் போட்டிக்கான இந்திய நீச்சல் அணியில் இடம் பிடித்துள்ளனர். ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதால், இவர்களுக்கு போட்டியில் பங்கேற்க இடைக்கால தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரிச்சா மற்றும் ஜோட்சனா இருவரும், காமன்வெல்த் போட்டிக்கான இந்திய அணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பதிலாக மாற்று வீராங்கனைகள் தேர்வு செய்வது குறித்து 2வது சோதனையின் முடிவுக்கு பின் அறிவிக்கப்படும்.