25 ஆண்டுகளாக தேர்ச்சியில் முதலிடம் வகிக்கும் காமராஜர் பிறந்த விருதுநகர்-அன்பழகன் பெருமை
நெல்லை: கடந்த 23 ஆண்டுகளாக பத்தாவது, பிளஸ்டூ தேர்வில் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதலிடம் பிடித்து வருவது பாராட்டுக்குரியது என்று தமிழக நிதியமைச்சர் அன்பழகன் பாராட்டியுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் பாளையங்கோட்டை சாராள்தக்கர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா நடந்தது. இதில் தமிழக நிதியமைச்சர் க. அன்பழகன் கலந்து கொண்டு நல்லாசிரியர்கள் மற்றும் 10-ம், 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களுக்கு பரிசு வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது,
ஒரு ஆசிரியரால் எந்த அளவுக்கு உயர முடியும் என்பதற்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் முன் உதாரணமாக விளங்கினார். எனவே ஆசிரியர்கள் மேலும், மேலும் உயர்வதற்கு தங்கள் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். தமிழ் நாட்டில் ஆசிரியர்களின் குறைகளை போக்கும் நிறைவான ஆட்சி நடக்கிறது.
சிறந்த அறிஞர்களை, மேதைகளை உருவாக்கத் தொண்டாற்றும் ஆசிரியர்கள் முழு ஈடுபாட்டோடு பணியாற்ற வேண்டும் என்பதற்காகத் தான் அவர்களின் குறைகளை முதல்வர் கருணாநிதி நிவர்த்தி செய்து வருகிறார்.
கடந்த 25 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டம் மாணவர்கள் தேர்ச்சியில் முதலிடத்தில் உள்ளனர். காமராஜர் பிறந்த மாவட்டம் என்பதால் இச்சிறப்பு கிடைத்துள்ளது. ஆனால் தமிழகத்திலேயே அதிகம் படித்தவர்கள் உள்ள மாவட்டம் திருநெல்வேலி தான்.
பல்வேறு தமிழறிஞர்கள் இந்த மண்ணில் உருவாகியிருக்கிறார்கள். மாணவர்களிடம் ஆசிரியர்கள் கோபப்படாமல் பொறுமையோடு கற்பிக்க வேண்டும் என்றார் அன்பழகன்.












Click it and Unblock the Notifications