ஸ்பெக்ட்ரம்.. ராசா.. விவகாரம்: 'நோ-கமென்ட்ஸ்'- பிரதமர்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது கூறப்படும் புகார்கள் குறித்து நான் மீடியாக்களில் வந்த செய்திகளை மட்டுமே அறிவேன். இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளதால், அதுகுறித்து நான் இங்கு கருத்துத் தெரிவிப்பது சரியல்ல என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று தனது இல்லத்தில் மூத்த பத்திரிகை ஆசிரியர்களுடன் சுமார் 2 மணி நேரம் பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் உரையாடினார். அவர் கூறுகையில்,

காஷ்மீர் விவகாரத்திலும் அருணாசலப் பிரதேசம் விஷயத்திலும் சீனா அவ்வப்போது எரிச்சலூட்டும் கருத்துகளைக் கூறி வருகிறது. ஆசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போட்டிகள் இருக்கத்தான் செய்யும். அதேபோல இரு நாடுகள் இடையே ஒருங்கிணைப்பும் இருப்பதை மறுக்க முடியாது.

போட்டிகள் அமைதியானவையாக இருக்க வேண்டும். இதனால் தான் ஒவ்வொரு ஆண்டும் அந்நாட்டு அதிபர் ஹு ஜின்டாவோ, பிரதமர் வென் ஜியாபோவை சந்தித்து வருகிறேன்.

பாகிஸ்தானில் நிலவும் அரசியல் சூழல் காரணமாகவே அந்த நாட்டுடன் நல்லுறவை தொடர வேண்டியுள்ளது. இருப்பினும் மும்பையில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு இந்த அபிப்ராயத்தை நாம் மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியமானது.

கடந்த ஜூலையில் நமது வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, பாகிஸ்தான் அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி இடையிலான பேச்சு தோல்வியடைந்தது. இரு நாடுகளிடையிலான உறவில் இதுபோன்ற விபத்துகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கும், அதைத் தவிர்க்க முடியாது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவதன் மூலம் இரு நாடுகளிடையே நல்லுறவு மேலும் வலுப்படுத்தும்.

மத்திய அமைச்சர்களை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் விமர்சிப்பதில் எந்தத் தவறும் இல்லை. இதனால் ஆட்சிக்கும், கட்சிக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி நிலவுவதாகக் கூறப்படுவது தவறு.

இதற்கு முன்பும் இதேபோல கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து மாற்றுக் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர். அவையெல்லாம் ஆக்கப்பூர்வமான கருத்துக்கள் தான்.

காங்கிரஸ் கட்சியில் உள்ள ஜனநாயகத்தின் பிரதிபலிப்பு தான் அது. இருப்பினும் கட்சிக்கும், ஆட்சிக்கும் ஒருங்கிணைப்பு இருக்க வேண்டியதும் மிகவும் அவசியம். இதன் மூலம்தான் அரசு சிறப்பாக செயல்பட முடியும். தற்போது அந்த ஒருங்கிணைப்பு உள்ளது.

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கும் அவரது அமைச்சரவை சகாவான சர்தார் படேலுக்கும் பல சமயங்களில் மாறுபட்ட கருத்துகள் நிலவின. ஆனாலும் இருவரும் இணைந்து மிகச் சிறப்பாக செயலாற்றினர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் மத்திய அமைச்சர் ஆ. ராசா மீது கூறப்படும் புகார்களைப் பொறுத்தவரை, நான் மீடியாக்களில் வந்த செய்திகளை மட்டுமே அறிவேன். இந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தில் உள்ளதால், அதுகுறித்து நான் இங்கு கருத்துத் தெரிவிப்பது சரியல்ல.

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்றே நினைக்கிறேன். நாட்டின் மொத்தம் உள்ள மக்கள் தொகையில் 37 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். அனைத்து ஏழை மக்களுக்கும் அரிசி, கோதுமையை இலவசமாக வழங்குவது எளிதான காரியமல்ல.

இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்றத்தின் முழு தீர்ப்பையும் படிக்கவில்லை. இருப்பினும் உச்சநீதிமன்றத்தின் கரிசனம் நியாயமானது என்பதை உணர முடிகிறது. அதானால் கட்டுபடியாகும் விலையில் ஏழைகளுக்கு அரிசி, கோதுமை கிடைக்க வேண்டும் என்ற நீதிமன்ற கருத்தை ஏற்கிறேன்.

ஏழைகளுக்கு இலவசமாக அரிசி, கோதுமையை வழங்கினால் அது விவசாயிகளை மன ரீதியில் பாதித்துவிடும். இதனால் விளைச்சலைப் பெருக்க வேண்டும் என்ற எண்ணத்தையே அவர்கள் கைவிட்டுவிடுவர் என்றார் மன்மோகன் சிங்.

ராகுல் காந்தி பிரதமராக பொறுப்பேற்பதற்கு ஏற்ற தருணத்திற்காக அமைச்சரவை காத்திருக்கிறதா? என்று கேட்டதற்கு, அரசியல் என்பதே போட்டி நிறைந்த விளையாட்டுதானே என்று கூறிவிட்டு சிரித்தார் பிரதமர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+