ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவருக்கு ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவியா?: பாஜக

இவர் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையவர் என்று கூறி அவரது பதவியேற்பு விழாவை பாஜக புறக்கணித்தது.
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக இருந்த பிரதியுஷ் ஷாவின் பதவிக் காலம் நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதையடுத்து புதிய ஆணையரை நியமிப்பது தொடர்பான தேர்வு கமிட்டி கூட்டம் சில நாட்களுக்கு முன் நடந்தது.
அந்தக் கமிட்டியில் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்தப் பதவிக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் பி.ஜே.தாமஸ் பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், அதற்கு சுஷ்மா கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்.
ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைவரிசை முறைகேட்டில் தாமசுக்கும் தொடர்பு இருப்பதாகவும், அதை மூடி மறைக்கவே, அவரையே மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக சுஷ்மா குற்றம் சாட்டினார்.
மேலும் தேர்வுக் கமிட்டி கூட்டத்திலேயே, பி.ஜே.தாமஸ் நியமனத்துக்கு எதிரான தனது குறிப்பையும் சுஷ்மா சுவராஜ் எழுதினார்.
ஆனாலும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் பி.ஜே.தாமஸையே தேர்வு செய்தனர். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியானது.
இந்த அறிவிப்பு வெளியான உடனேயே, மத்திய ஊழல் கண்காணிப்பு துறையின் புதிய ஆணையராக நேற்று மாலையே பி.ஜே.தாமஸ் பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மன்மோகன் சிங், துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, ப.சிதம்பரம், மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, தலைமைத் தகவல் ஆணையர் வஜாஹத் ஹபிபுல்லா, மத்திய கேபினட் செயலாளர் கே.எம்.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆனால், இந்த பதவியேற்பு நிகழ்ச்சியை பாஜக புறக்கணித்து விட்டது.
இந்த விழா முடிந்தவுடன் சுஷ்மா சுவராஜ் நேற்றிரவு ஜனாதிபதி பிரதீபா பட்டீலை நேரில் சந்தித்து தாமசுன் நியமனத்துக்கு தனது எதிர்ப்பைத் தெரிவித்தார்.
மத்திய தகவல் தொடர்புத்துறைச் செயலாளராக இருந்து வந்த பி.ஜே.தாமஸ், கேரள மாநிலத்தைச் சேர்ந்த 1973ம் ஆண்டு பேட்ஜ் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.












Click it and Unblock the Notifications