இந்தியா... 10 மில்லியனை நெருங்கும் பிராட்பேண்ட் இணைப்புகள்!
டெல்லி: இந்தியாவில் பிராட்பேண்ட் பயன்பாட்டாளர்கள் எண்ணிக்கை 10 மில்லியனைத் தாண்டியுள்ளது.
தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் - ட்ராய் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி, கடந்த ஜூன் 2010-ல் 9.45 மில்லியனாக இருந்த பிராட்பேண்ட் இணைப்புகளின் எண்ணிக்கை, ஜூலையில் 9.77 ஆக உயர்ந்துள்ளது.
ஆகஸ்ட் மாத கணக்குப்படி இது 10 மில்லியனைத் தாண்டியிருக்கலாம் என ட்ராய் கணித்துள்ளது.
இதில் பெருமளவு இணைப்புகள் அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மூலமே வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், லேண்ட்லைன் எனப்படும் தரைவழி இணைப்புகளின் பயன்பாடு குறைந்துவருகிறது. ஜூன் மாதம் 36.18 மில்லியனாக இருந்த தரைவழி இணைப்புகள், ஜூலை மாதம் 35.96 மில்லியனாகக் குறைந்துவிட்டது.
இன்னொரு பக்கம், செல்போன் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. ஜூலை மாதத்தில் மட்டும் 17 மில்லியன் புதிய வாடிக்கையாளர்கள் செல்போன் இணைப்பு பெற்றுள்ளனர்.
இத்துடன் சேர்த்து இந்தியாவில் 688.38 மில்லியன் பேர் தொலைபேசி வசதியைப் பெற்றுள்ளனர். இவர்களில் செல்போன் இணைப்பை மட்டும் பெற்றுள்ளவர்கள் 652.42 பேர்.
செல்போன் நிறுவனங்களில் இப்போதும் பார்தி ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு 139.2 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
113.3 மில்லியன் சந்தாதாரர்களுடன் ரிலையன்ஸ் இரண்டாம் இடத்திலும், 111.4 இணைப்புகளுடன் வோடபோன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. வழக்கம்போல பிஎஸ்என்எல் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications