அண்ணா பிறந்த நாளன்று கைதிகள் விடுதலை-சாமி கோரிக்கை நிராகரிப்பு
சென்னை: அண்ணா பிறந்த நாளையொட்டி கடந்த 2008ம் ஆண்டு கைதிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி தொடர்ந்திருந்த வழக்கில், அவரது கோரிக்கையை சென்னை உயர்நீதிம்ன்றம் நிராகரித்தது.
இதுதொடர்பாக சுப்பிரமணியசாமி கடந்த 2008ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் கூறியிருந்ததாவது:
2008ம் ஆண்டு செப்டம்பர் 15 ந்தேதி அண்ணா பிறந்தநாளன்று தமிழக அரசு 1,405 தண்டனை கைதிகளை நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்தது. இது சட்டத்திற்கு எதிரானதாகும். அரசியல் ரீதியாக முக்கிய கொலை வழக்குகளில் தண்டனை பெற்றவர்கள் எல்லாம் இதில் விடுதலை பெற்று விட்டனர்.
எனவே விடுவிக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இது தொடர்பாக விதிமுறைகளை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் இப்ராகிம் கலிபுல்லா, சுந்தரேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாமி நேரடியாக ஆஜராகி வாதாடினார். அவர் கூறுகையில், அண்ணா பிறந்தநாளான 15ந் தேதி சுமார் 2 ஆயிரம் கைதிகளை தமிழக அரசு விடுதலை செய்ய உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. என்னுடைய வழக்கில் கோர்ட்டு தீர்ப்பு கூறும் வரை கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழக அரசுக்கு கைதிகளை விடுவிக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.
இதற்கு விடுதலையானவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எம். ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். 1,405 பேரையும் பிரதிவாதிகளாக சேர்த்துதான் வழக்கை விசாரிக்கவேண்டும் என்றார்.
இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள், 2008ம் ஆண்டு விடுதலை தொடர்பான வழக்கில் தற்போதைய அரசின் முடிவுகளுக்கு நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி சாமியின் கோரிக்கையை தள்ளுபடி செய்தனர். பின்னர் வழக்கு நவம்பர் 8ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications