பார்வதி அம்மாளைப் பார்த்து காலில் விழுந்து வணங்கும் சிங்களர்கள்!
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாளின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை மருத்துவமனைக்கு வந்து பார்த்து சிங்களர்கள் காலில் விழுந்து வணங்கிச் செல்வதாக செய்திகள் கூறுகின்றன.
இலங்கை வல்வெட்டித்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்வதியம்மாள், தற்போது நீராகாரம் மற்றும் திட ஆகாரம் உட்கொள்வதாக அவரது உறவினரும் எம்.பி.,யுமான சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.
இந்நிலையில், வடமராட்சி பகுதிக்கு சுற்றுலா வருபவர்களில் ஏராளமானோர் பார்வதியம்மாளை பார்க்க வருவதாக இலங்கை தமிழ் இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சில தினங்களுக்கு முன்பு கூட, வட இலங்கைக்குக்கு சுற்றுலா வந்த 100 சிங்களவர்கள், வல்வெட்டித் துறை மருத்துவமனைக்கு வந்துள்ளனர். பிரபாகரனின் தாயாரைப் பார்க்க விரும்புவதாகக் கூறிய அவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதியளித்தது. அந்த சிங்களவர்களில் பலர் பார்வதியம்மாளைப் பார்த்ததும், காலில் விழுந்து வணங்கியதாக அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.
சில மாதங்களுக்கு முன், உடல் நிலை சீர்குலைந்து, நினைவு தப்பிய நிலையில் மலேசியாவிலிருந்து சென்னை வந்த பார்வதி அம்மாவுக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கக் கூட அனுமதி மறுக்கப்பட்டது. அவரை வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பினர் போலீசார்.
இதனால் அவர் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இந்த நிலையில் சிகிச்சை அளிக்க நிபந்தனையுடன் முன்வந்தன தமிழக - இந்திய அரசுகள். ஆனால் இதனை மறுத்துவிட்ட பார்வதி அம்மாள், மீண்டும் தன் சொந்த மண்ணுக்கே திரும்பினார். வல்வை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.












Click it and Unblock the Notifications