அண்ணா 102வது பிறந்த நாளையொட்டி 13 கைதிகளை விடுவிக்க அரசு உத்தரவு
சென்னை: அண்ணாவின் 102வது பிறந்த நாளையொட்டி 13 கைதிகளை விடுதலை செய்ய தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் 102வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி 13 கைதிகளை விடுவிக்க தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பேரறிஞர் அண்ணாவின் 102-வது பிறந்த நாள் விழாவையொட்டி மனிதாபிமான அடிப்படையில் 70 வயது நிரம்பிய மற்றும் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறைவு செய்து, கடலூர், பாளையங்கோட்டை, கோயம்புத்தூர், மதுரை, வேலூர் மற்றும் திருச்சி பெண்கள் தனிச்சிறை ஆகியவற்றில் உள்ள 80 வயது உடைய ஒரு பெண் கைதி உட்பட 13 சிறை வாசிகளை முன் விடுதலை செய்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அண்ணாவின் நூற்றாண்டு பிறந்தநாளையொட்டி ஏராளமான கைதிகளை தமிழக அரசு விடுவித்தது. இதில் மதுரை பெண் கவுன்சிலர் லீலாவதியைக் கொலை செய்து தண்டனை பெற்றவர்களும் அடக்கம். இதையடுத்து இந்த விடுதலையை எதிர்த்து ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் தற்போது மேலும் 13 கைதிகளை தமிழக அரசு விடுவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.