மதானியை கைது செய்த பெங்களூர் போலீஸ் அதிகாரிக்கு கோர்ட் சம்மன்
கொல்லம்: மதானியை கைது செய்த பெங்களூர் துணை கமிஷனர் ஓம்காரய்யா நேற்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கொல்லம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அவர் நேற்று ஆஜராகாததைத் தொடர்ந்து வரும் 23-ம் தேதி ஆஜராகும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெங்களூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் மதானி 31-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதையடுத்து கடந்த மாதம் 17-ம் தேதி பெங்களூர் துணை கமிஷனர் ஓம்காரய்யா தலைமையிலான போலீசார் மதானியை கைது செய்து பெங்களூர் கொண்டு சென்றனர்.
இதனிடையே மதானியின் சகோதரர் அப்துல் சலாம் கொல்லம் குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் மதானி கைது விவகாரத்தில் பெங்களூர் போலீசார் சட்டத்தை மீறியுள்ளதாகவும், கிரிமினல் சட்டப்படி ஒருவரை கைது செய்யும்போது 30 கி.மீ. மேல் கைதியை கொண்டு செல்ல வேண்டும் என்றால் அருகில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அனுமதி பெற வேண்டும்.
ஆனால் பெங்களூர் போலீசார் இந்த விதிமுறைகளை மீறி மதானியை பெங்களூர் கொண்டு சென்றுள்ளனர். எனவே, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பெங்களூர் துணை கமிஷனர் ஓம்காரய்யா கடந்த 13-ம் தேதி கொல்லம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இது தொடர்பாக ஓம்காரய்யாவுக்கு நோட்டிசும் அனுப்பப்பட்டது. ஆனால் நேற்று அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வரும் 23-ம் தேதி கொல்லம் நீதிமன்றத்தில் ஓம்காரய்யா நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications