தட்டுத் தடுமாறி இந்தி பேசிய ப.சிதம்பரம்-இந்தியை செழிப்பாக்க கோரிக்கை
டெல்லி: டெல்லியில் நடந்த இந்தி தின நிகழ்ச்சியின்போது தட்டுத் தடுமாறி இந்தியில் பேசி அனைவரையும் கவர்ந்தார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். இந்தி மொழியை மேம்படுத்தவும், சிறப்பிக்கவும் அனைவரும் இந்தியில் பேச, எழுத முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
டெல்லியில் நேற்று இந்தி தினம் கொண்டாடப்பட்டது. அதில் ப.சிதம்பரம் கலந்து கொண்டு இந்திரா காந்தி தேசியமொழி விருதுகளை வழங்கினார். இந்தி தின விழா என்பதால் இந்தியில் சில வார்த்தைகளையாவது பேச விரும்பிய ப.சிதம்பரம் தட்டுத் தடுமாறி பேசினார்.
தனது தொடக்க உரையை வாசிக்கத் தொடங்கிய ப.சிதம்பரம் சில வார்த்தைகளை இந்தியில் பேசினார். இதைப் பார்த்து கூட்டத்தினர் வியப்படைந்தனர். ஆங்கிலத்தில் மடை வெள்ளம் போல பேசும் ப.சிதம்பரம் இந்தியில் தட்டுத் தடுமாறிப் பேசியதைப் பார்த்து அவர்கள், ப.சிதம்பரத்தை ஊக்கப்படுத்தும் வகையில் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பின்னர் ஆங்கிலத்திற்குத் தாவினார் ப.சிதம்பரம். தனது உரையை முடிக்கும்போது மீண்டும் இந்திக்குத் திரும்பிய அவர் இந்தியிலேயே தனது உரையை நிறைவு செய்தார்.
நிகழ்ச்சியில் ப.சிதம்பரம் பேசுகையில், அனைத்து அரசுத் துறை அலுவலகங்களும் இந்தி மொழியை வளர்க்கும் வகையில் தகவல் தொடர்புகளை இந்தியிலேயே மேற்கொள்ள வேண்டும் என்றார்.