கங்கைகொண்டான் ஐடி பார்க் நவம்பரில் திறக்கப்படும்: அமைச்சர் பூங்கோதை
நெல்லை: கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்கா வரும் நவம்பர் மாதத்தில் திறக்கப்படும் என்று நெல்லையில் தகவல் தொழி்ல்நுட்பத் துறை அமைச்சர் பூங்கோதை தெரிவித்தார்.
நெல்லை, மதுரை, திருச்சியில் அமைக்கப்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களில் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்வது தொடர்பாக தமிழக தொழில்நுட்பத் துறை அதிகாரிகள், இந்திய தொழி்ல் கூட்டமைப்பு, வர்த்தக தொழில் சங்கம், சிறு தொழில் சங்க நிர்வாகிகள் கலந்தாலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் அமைச்சர் பூங்கோதை கலந்து கொண்டார்.
பின்னர் அமைச்சர் பூங்கோதை நிருபர்களிடம் கூறியதாவது,
நெல்லை மாவட்டத்தைத் தொழில் வளம் மிகுந்த மாவட்டமாக மாற்றுவது தொடர்பாக தொழிலதிபர்களுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டது. கங்கைகொண்டான் தொழில்நுட்ப பூங்கா பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. அக்டோபர் இறுதிக்குள் இந்த பணிகள் முடிந்து விடும்.
நவம்பர் மாதம் தமிழக முதல்வரால் கங்கைகொண்டான் பூங்கா திறக்கப்படும். இந்த தொழில்நுட்ப பூங்காவில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன.
கிராமப்புறங்களில் பிபிஓ திறப்பதற்காக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பயிற்சி மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைத் தொடங்குவதற்காக ரூ.4 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை அரசு மானியமாக வழங்கப்படும்.
கிராமப்புறங்களில் பிபிஓ துறையில் முதலீடு செய்வதற்கு ஒருங்கிணைப்பாளராக எல்காட் நிறுவனம் செயல்படும் என்றார் அவர்.