இலவச கலர் டிவிக்கள் வழங்குவதில் சிக்கல்: டிவிக்களை எடுத்துச் செல்ல முயற்சி
செங்கோட்டை: செங்கோட்டையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட இருந்த இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வருவாய் துறையினர் லாரியில் எடுத்துச் செல்ல முயற்சி செய்தனர். இதற்கு நகர்மன்ற தலைவர், கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
செங்கோட்டையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 7, 400 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வந்தன. தென்காசி எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் கடந்த வாரம் இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்குவதை துவங்கி வைத்தார். 6,800 பயனாளிகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் வழங்கப்பட்டன.
இதில் பல பயனாளிகள் இடம் மாறி இருந்ததாலும், வெளியூர் சென்றிருந்ததாலும், தொலைக்காட்சிப் பெட்டி வழங்குவது தாமதமாக நடந்து வந்தது. இந்நிலையில் பொதுமக்களுக்கு வழங்க இருந்த மீதமுள்ள 550 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அங்குள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் வருவாய் துறை மக்களுக்கு தொலைக்காட்சிப் பெட்டிகளை வழங்கி விட்டதாகக் கூறி அவற்றை லாரியில் எடுத்துச் செல்ல முயன்றனர்.
தகவல் அறிந்த நகர்மன்ற தலைவர் ரஹீம், கவுன்சிலர்கள் கல்யாணி, கணேசன், சங்கரலிங்கம் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து லாரியை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு வழங்க இருந்த 250 கலர் டிவிக்களை தவிர மீதமுள்ள 300 டிவிக்களை அவர்கள் எடுத்துச் செல்ல அனுமதித்தனர்.