சோராபுதீன் போலி என்கெளண்டர் வழக்கு-முக்கிய சாட்சி அஸம் கான் சுடப்பட்டார்
உத்யபூர் புறநகர்ப் பகுதியில் வைத்து அடையாளம் தெரியாத இருவர் அஸம் கானை சுட்டுள்ளனர். இதில் அஸம்கானுக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவர் அபாயகரமான நிலையில் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அவரை சுட்ட இருவரும் தப்பி ஓடி விட்டனர்.
இந்த அஸம்கான் தான், சோராபுதீனை சுட்டுக் கொல்ல ராஜஸ்தானைச் சேர்ந் மார்பிள் தொழிலதிபர்கள் சேர்ந்து ரூ. 10 கோடி பணத்தைக் கொடுத்து, முன்னாள் உள்துறை அமைச்சர் அமீத் ஷா மூலம் காரியத்தை சாதித்துக் கொண்டதாக தெரிவித்திருந்தார்.
இந்தத் தகவல்களை இன்னொரு போலி என்கெளண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்ட பிரஜாபதி சிறையில் வைத்து தன்னிடம் தெரிவித்ததாகவும் அவர் கூறியிருந்தார். சோராபுதீனை போலீஸார் சுட்டுக் கொன்றதை நேரில் பார்த்த ஒரே சாட்சி பிரஜாபதிதான். சோராபுதீன் என்கவுன்டருக்குப் பிறகு பிரஜாபதி மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டு விட்டார். ஆனால் அவரும் போலி என்கெளண்டர் மூலமாக சுட்டுக் கொல்லப்பட்டதாக அஸம்கான் கூறியிருந்தார்.
ராஜஸ்தானைச் சேர்ந்த முன்னாள் பாஜக அமைச்சர் குலாப் சந்த் கத்தாரியாதான் சோராபுதீனை தீர்த்துக் கட்டும் பொறுப்பை ஏற்றுக் கொண்டதாகவும், ராஜஸ்தானில் வைத்து அதை நிறைவேற்ற அப்போதைய முதல்வர் வசுந்தரா ராஜே உடன்படாததால், திட்டத்தை குஜராத்துக்கு கத்தாரியா மாற்றியதாகவும் அஸம் கான் கூறியிருந்தார்.
இந்தத் தகவல்களைக் கூறியதால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும கூறியிருந்தார் அஸம்கான். இந்த நிலையில்தான் அவரைக் கொல்ல முயற்சி நடந்துள்ளது. மார்பிள் மாபியா கும்பல்தான் இதற்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.