சென்னை-50 வயதுப் பெண் பன்றிக் காய்ச்சலுக்குப் பலி
சென்னை: தமிழகத்தில் பன்றிக் காய்ச்சல் படு வேகமாக பரவி வருகிறது. தினசரி ஒருவர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு பெண் உயிரிழந்தார்.
தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, கோவையை அடுத்து சென்னையில் பன்றிக் காய்ச்சல் நோய் பரவுகிறது. சில நாட்களுக்கு முன் தலைமை செயலகத்தில் உதவி மக்கள் தொடர்பு அதிகாரியாக பணிபுரிந்த மோகனவேல் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். அதைத் தொடர்ந்து கோவை, கன்னியாகுமரி எ பன்றிக் காய்ச்சலுக்கு சிலர் உயிரிழந்தனர். நேற்று ஓசூரில் ஒருவர் பன்றிக் காய்ச்சலுக்கு இறந்தார்.
தற்போது சென்னையில் இன்னொருவர் பன்றிக் காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளார். அவரது பெயர் குப்பம்மாள், 50 வயதுப் பெண்.
திருவேற்காடு தேவி நகர் 6-வது தெருவில் வசித்து வந்தார்.
குப்பம்மாளுக்கு கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு காய்ச்சல் இருமல் இருந்தது. வீட்டிலேயே தங்கி சிகிச்சை பெற்றார். நேற்று காலை திருவேற்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை பரிசோதித்து பார்த்து விட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரது ரத்த மாதிரி சளி ஆகியவை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் அவருக்கு பன்றிக்காய்ச்சல் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். குப்பம்மாளுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications