பத்திரிக்கையாளர்களைத் தாக்கிய பேராயர் சின்னப்பாவின் உதவியாளர்கள்
சென்னை: சென்னையில் செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி நிருபர் மற்றும் கேமராமேன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைக் கண்டித்து பத்திரிகையாளர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆசிரியை ஒருவர் தொடர்ந்த வழக்கு தொடர்பாக, சென்னை மயிலை கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் சின்னப்பாவிடம் விசாரணை நடத்த வக்கீல்கள் கமிஷன் ஒன்றை சென்னை உயர் நீதிமன்றம நியமித்துள்ளது.
இதையடுத்து அந்த கமிஷன் நேற்று பேராயர் சின்னப்பாவிடம் அவரது வீட்டில் விசாரணை நடத்தியது.
இது தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி நிருபர் விக்ரம் கோபிநாத், கேமராமேன் மனீஷ் தனானி ஆகியோரை சின்னப்பாவி்ன் வீட்டில் இருந்தவர்களும் அவரது உதவியாளர்களும் தாக்கினர்.
அவர்களது கேமராவை பிடுங்கி, அவர்களை ஒரு அறையில் பூட்டி வைத்தனர்.
இது குறித்து போலீசார் மீதும் புகார் தரப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஏராளமான பத்திரிகையாளர்கள் சாந்தோம் ஹைரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் நடந்த இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன.
இதையடுத்து அங்கு வந்த கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர், இணை கமிஷனர் சக்திவேலு, துணை கமிஷனர் பெரியய்யா, உதவி கமிஷனர் ஐசக் பால்ராஜ் ஆகியோர் பத்திரிகையாளர்களை சமாதானப்படுத்தினர்.
பேராயர் சின்னப்பாவும் அங்கு வந்து, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்தார். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
பத்திரிக்கையாளர்களைத் தாக்கியவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மைலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications