முதல்வர் வீட்டுக்குள் நுழைய முயன்று பிடிபட்ட வீரப்பன் தங்கை மகன்
சென்னை: முதல்வர் கருணாநிதியின் வீட்டுக்குச் செல்ல முயன்ற சந்தனக் கடத்தல் வீரப்பனின் தங்கை மகனை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
கோபாலபுரத்தில் முதல்வர் கருணாநிதியின் வீடு உள்ளது. இப்பகுதி பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ளது. இந்த நிலையில் நேற்றுகாலை இப்பகுதிக்குள் ஒரு வாலிபர் சந்தேகத்திற்கிடமான வகையில் சென்று கொண்டிருந்தார். முதல்வர் வீட்டை நோக்கி அவர் சென்றார்.
இதையடுத்து போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். உடனடியாக ராயப்பேட்டை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது அவரது பெயர் சதீஷ்குமார், வயது 24, சந்தனக் கடத்தல் வீரப்பனின் மறைந்த தங்கை மாரியம்மாளின் மகன் என்று தெரிய வந்தது.
ஏன் முதல்வர் வீட்டுக்கு வந்தீர்கள் என்று கேட்டபோது, கடந்த 1995ம் ஆண்டு எனது தந்தை அர்ஜூனனை கர்நாடக போலீஸார் பிடித்துச் சென்றனர். இதுவரை அவர் விடுவிக்கப்படவில்லை. இதுகுறித்து முதல்வரிடம் முறையிட்டு அனு அளிப்பதற்காக வந்ததாக தெரிவித்தார் சதீஷ்குமார்.
தீய நோக்கத்தோடு அவர் வரவில்லை என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து சதீஷ்குமாரை போலீஸார் விடுவித்தனர்.