சாதிவாரி கணக்கெடுப்பு-கருணாநிதிக்கு சோனியா பதில் கடிதம்
சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை ஏற்கப்பட்டு்ள்ளது குறித்து முதல்வர் கருணாநிதிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என்று கோரி சோனியா காந்திக்கு, முதல்வர் கருணாநிதி கடந்த ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதிலளித்து சோனியா காந்தி எழுதியுள்ள கடிதத்தில்,
சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பான தங்களின் கடிதம் கிடைத்துள்ளது. உங்கள் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கி, செப்டம்பர் மாதம் வரை தனியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
பெரியார் பிறந்த நாள்-கருணாநிதி அஞ்சலி:
இதற்கிடையே பெரியாரின் 132வது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு முதல்வர் கருணாநிதி இன்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி, வீரபாண்டியன் ஆறுமுகம், பரிதி இளம்வழுதி ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பாமக தொடர் போராட்டம் ஒத்திவைப்பு:
இந் நிலையில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பாமக சார்பில் செப்டம்பர் 18ம் தேதி நடத்தவிருந்த தொடர் முழுக்கப் போராட்டம் செப்டம்பர் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமூக நீதிக் கொள்கையை முழுமையாக அமல்படுத்த தடையாக உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காண சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்தக் கோரிக்கையை பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டுச் சட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது, இன்னும் ஓராண்டுக்குள் தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடிக்கவும், அதன் அடிப்படையில் தேவைப்பட்டால் இடஒதுக்கீட்டின் அளவை புதிதாக முடிவு செய்து, சட்டம் இயற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இடஒதுக்கீட்டு சலுகை பெறும் தகுதியுடையவர்கள் எண்ணிக்கைக்கேற்ப இட ஒதுக்கீட்டு அளவை முடிவு செய்யும் அதிகாரம் ஒவ்வொரு மாநிலத்துக்கும் வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம்.
அந்த வகையில் இப்போதைய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தமிழகத்துக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். நமது மாநிலத்தில் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தி, இடஒதுக்கீட்டின் அளவை 69 சதவீதத்துக்கும் அதிகமாக முடிவு செய்து சட்டம் இயற்ற அரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்பை தமிழக அரசு தவறவிடக் கூடாது.
எனவே, தமிழகத்தில் உடனடியாக சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வலியுறுத்தி பாமக சார்பில் செப்டம்பர் 18ல் மாநிலம் முழுவதும் மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தவிர்க்க முடியாத காரணங்களால் இப் போராட்டம் இம்மாதம் 28ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.