போச்சம்பள்ளி பள்ளி எரிப்பைக் கண்டித்து தனியார் பள்ளிகள் ஸ்டிரைக்-போதிய ஆதரவில்லை

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அண்ணா அறிவகம் பள்ளியில் பிளஸ்-2 படித்துவந்த மாணவர் சுரேஷ் கடந்த 13-ந் தேதி அதே பள்ளியின் பஸ் மோதி உயிரிழந்தார். இதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் அந்த பள்ளி தீவைத்து கொளுத்தப்பட்டது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 300-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் மூடப்பட்டன.
இந்த நிலையில், போச்சம்பள்ளி தனியார் பள்ளியில் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் தமிழகம் முழுவதும் இன்று அனைத்து நர்சரி, பிரைமரி மற்றும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளும் மூடப்படும் என்று தமிழ்நாடு தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்தது.
அதன்படி இன்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டு ஸ்டிரைக் தொடங்கியது. மொத்தம் உள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில் சொற்ப எண்ணிக்கையிலான பள்ளிகளைத் தவிர பெரும்பாலானவை திறந்திருந்தன.
சென்நையைப் பொறுத்தவரை பெரும்பாலான பள்ளிகள் திறந்திருந்தன. சில பள்ளிகள் மட்டும் மூடப்பட்டிருந்தன. புறநகர்ப் பகுதிகளிலும் கூட பல பள்ளிகள் திறந்திருந்தன.
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கிட்டத்தட்ட அனைத்துப் பள்ளிகளும் மூடப்பட்டிருந்தன. தமிழகத்தின் இதர பகுதிகளிலும் பெரும்பாலான பள்ளிகள் திறந்திருந்தன.
முன்னதாக ஸ்டிரைக் குறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் சங்கத் தலைவர் நந்தகுமார் கூறுகையில்,
தீ வைப்பு சம்பவம் நடந்த போச்சம்பள்ளி பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சான்றிதழ்கள் எரிந்து போய்விட்டன. 3 பள்ளி பஸ்கள், 2 வேன்கள், 60 கம்ப்யூட்டர்கள் சேதமடைந்துள்ளன. ரூ.3 கோடி மதிப்புக்கு மேற்பட்ட பொருட்கள் எரிந்து நாசம் அடைந்துள்ளன.
தீவைத்து எரிக்கப்பட்ட பொருட்களுக்கு அரசு நஷ்ட ஈடு வழங்க வேண்டும். வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். எரிந்துபோன சான்றிதழ்கள் உடனடியாக கிடைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த சம்பவத்தில் காவல்துறை முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அரசு கடும் எச்சரிக்கை:
முன்னதாக தனியார் பள்ளிகளை மூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் தேவராஜன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
தனியார் பள்ளி நிர்வாகிகள் பள்ளிகளை மூடி போராட்டம் நடத்தப்போவது குறித்து எனக்கு முறையான தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. பள்ளிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக சங்க நிர்வாகிகள் என்னிடம் கடிதம் எதுவும் கொடுக்கவில்லை.
ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் பள்ளிகளை மூடுவது தவறு. தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடந்துகொண்டிருக்கின்றன. இன்று மூடியிருக்கும் தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். அதை தொடர்ந்து அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இன்று ஸ்டிரைக்கில் கலந்து கொண்ட பள்ளிகள் எவை எவை என்பது குறித்து பள்ளிக் கல்வித்துறையினர் கணக்கெடுத்து அரசுக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்று தெரிகிறது.
குமரி, திருப்பூர், நாமக்கல், பெரம்பலூரில் மூடல்:
அதேசமயம், கன்னியாக்குமரி, திருப்பூர், நாமக்கல், பெரம்பலூர் மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. இதனால் இன்று நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications