சென்னையில் நாளை முதல் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு
சென்னை: சென்னையில் நாளை முதல் விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்படுகின்றன.
விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையில் கடந்த 11ம் தேதி விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா ஆகிய அமைப்புகள் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைக்க தனித்தனி இந்த அமைப்புகளுக்கு நேரம், நாள், இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சிலைகளைக் கரைக்க பட்டினப்பாக்கம், காசிமேடு மீன்பிடி துறைமுகம், எண்ணூர், திருவொற்றியூர் உள்பட 6 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
நாளை சிவசேனா அமைப்பு சார்பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது. நாளை மறுநாள் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி சார்பில் ஊர்வலம் நடக்கிறது.
பிரமாண்டமான விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பதற்காக ராட்சத கிரேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிலை ஊர்வல பாதுகாப்பு பணியில் 6,000 போலீசார் ஈடுபடவுள்ளனர்.
முத்துப்பேட்டையில் பதட்டம்:
இந் நிலையில் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையிலும் நாளை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறவுள்ளது.
இங்கு ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலை ஊர்வலத்தில் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது.
ஊர்வலப் பாதையில் கடந்த ஆண்டு முதல் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஊர்வலம் நடத்துவோர் பழைய பாதையிலேயே செல்வோம் என்று கூறி வருகின்றனர். இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
இதையடுத்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரசேகரன் தலைமையில், மாவட்ட எஸ்.பி. மூர்த்தி கூட்டம் நடத்தினார்.