For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்சியிலிருந்து விலகாதீர்கள் என்று வீடு, வீடாகச் சென்று கெஞ்சும் அதிமுக: ஸ்டாலின்

By Chakra
Google Oneindia Tamil News

Stalin
சென்னை: நாம் எல்லாம் கட்சியில் தொண்டர்களை இணைக்கத் தான் வீடு, வீடாக செல்வோம். ஆனால், யாரும் கட்சியிலிருந்து விலக வேண்டாம் என்று வீடு, வீடாகச் சென்று கெஞ்சும் நிலையில் அதிமுக உள்ளது என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

வட சென்னையில் அதிமுக, தேமுதிக, பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த 15,000 பேர் துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திமுகவில் இணைந்தனர்.

இந் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின்,

இன்றைக்கு புதிது புதிதாக பல கட்சிகள் தொடங்கப்படுகின்றன. சில கட்சித் தலைவர்கள் தாங்கள் கட்சித் தொடங்குவதற்கு முன்பே அடுத்த முதல்வர் நான் தான் என்று அறிவிக்கின்றனர். ஆனால், இன்று மக்களால் அவர்கள் அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர்.

1949ம் ஆண்டு திமுக தொடங்கப்பட்டாலும், 1957ல் தான் தேர்தல் களத்திற்கு நாம் சென்று 15 இடங்களில் வெற்றி பெற்றோம். 1962ல் 50 இடங்களில் வெற்றி பெற்று பிரதான எதிர்க்கட்சியாக இடம் பிடித்தோம். அடுத்த பொது தேர்தலில் 1967ம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றோம்.

ஓர் ஆண்டுக்குள்ளாக அண்ணா கொடுமையான நோய்க்கு ஆளாகி நம்மை ஆறாத துயரத்தில் ஆழ்த்திவிட்டு மறைந்தார். தலைவர் கருணாநிதி அண்ணாவிற்கு பிறகு முதலமைச்சராக பொறுப்பேற்று பின்னர் 1971ல் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்தார்.

இப்படி பல தேர்தல்களில் வெற்றி பெற்று மீண்டும் 5 முறையாக 2006ல் தலைவர் கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்று மக்கள் நலத் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறார்.

திமுக வெற்றி கண்டு வெறி கொண்டு அலைவதில்லை. தோல்வியால் துவண்டு போய், ஜெயலலிதா போல் கொடநாட்டில் முடங்குவதும் இல்லை. வெற்றியையும், தோல்வியையும் பற்றி கவலைப்படாமல் மக்களுக்காக தொடர்ந்து தொண்டாற்றுவது திமுகதான்.

திமுகவில் மாற்று கட்சியினர் இணைவது சென்னையில் மட்டும் அல்ல, தமிழகம் முழுவதும் திமுகவில் அலை, அலையாக பல்வேறு கட்சிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் இணைந்து கொண்டு இருக்கிறார்கள்.

பொதுவாக ஆளும் கட்சியினருக்கு மக்களை சந்திக்க பயம் இருக்கும். ஏனென்றால் மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும், ஆட்சியாளர்களால் நிறைவேற்ற முடியாது. ஆனால் தலைவர் ஆட்சியின் சாதனைகளால் நாம் எங்கு சென்றாலும் மகத்தான வரவேற்பு, மக்கள் புன்சிரிப்போடும் நம்மை வரவேற்கிறார்கள்.

சொன்னது ஒரு கிலோ அரிசி 2 ரூபாய், கொடுப்பது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி. திருமண நிதி உதவித் திட்டத்தில் சொன்னது ரூ.15 ஆயிரம், கொடுப்பதோ ரூ.25 ஆயிரம்.

சத்துணவு சாப்பிடும் மாணவர்களுக்கு வாரத்தில் 5 நாட்களுக்கும் முட்டை வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார் கருணாநிதி. முட்டை வழங்குவதை தடுத்து நிறுத்தியவர் தான் இந்த ஜெயலலிதா.

இன்று அதிமுகவில் இருந்து பொறுப்பில் உள்ள நீங்கள் எல்லாம் விலகி வருகிறீர்கள் என்றால், காரணம் ஜெயலலிதாவை ஏதாவது பிரச்சனை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ள முடியாது. உங்களுக்கு எந்த பிரச்சனை என்றாலும் நீங்கள் என்னை எப்போதும் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். தலைவர் கருணாநிதியை எளிதாக அணுகலாம். இது தான் திமுகவின் நடைமுறை.

முதலில் 3 ஆயிரம் தொண்டர்கள் இணைகிறார்கள் என்று சொல்லி, தற்போது 15,000 மேற்பட்டவர்கள் இணைந்துள்ளார்கள். வட சென்னையில் அதிமுகவின் கூடாரமே காலி, எதிர்கட்சியினரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு திரளாக இங்கு இணைத்துள்ளீர்கள்.

நான் கூட வரும் வழியில் கேள்விப்பட்டேன். இங்குள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வீடு, வீடாக சென்று கட்சியில் இருந்து விலகாதீர்கள் என்று கெஞ்சுவதாக கூறினார்கள். நாம் எல்லாம் கட்சியில் இணைக்கத் தான் வீடு, வீடாக செல்வோம். ஆனால், இன்று அதிமுகவின் நிலையோ யாரும் கட்சியிலிருந்து விலக வேண்டாம் என்று கெஞ்சும் நிலையில் உள்ளது என்றார் ஸ்டாலின்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X