ஆண் நண்பருடன் ரயில் நிலையத்தில் பேசிய மாணவியை எஸ்.ஐ. அவமதித்ததாக புகார்
சென்னை : தனது ஆண் நண்பருடன் படிப்பு தொடர்பாக ரயில் நிலையத்தில் வைத்துப் பேசிக் கொண்டிருந்த பிஎச்டி ஆய்வு மாணவியை அவமதித்ததாக சப் இன்ஸ்பெக்டர் மீது புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து அந்த மாணவி புகார் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியுள்ள புகாரில்,
நான் சென்னை பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி ஆய்வுப் படிப்பை மேற்கொண்டுள்ளேன். எனது கணவர் அமெரிக்காவில் இருக்கிறார். எனது ஆண் நண்பருடன் இந்திராநகர் ரயில் நிலையம் எதிரில் இருந்தபோது சப்- இன்ஸ்பெக்டர் வர்கீஸ் வந்து எங்களை மிரட்டினார். போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தார்.
நான் அவரிடம் எனக்கு திருமணமாகி விட்டது. எனது படிப்பு சம்பந்தமாக நண்பருடன் விவாதித்துக்கொண்டு இருந்தேன். இதுபற்றி எனது கணவருக்கு தெரியும் என்று சொன்னேன். உடனே அவர் இது ஒன்றும் அமெரிக்கா இல்லை தமிழ்நாடு. போலீஸ் நிலையத்துக்கு வாருங்கள் என்று அழைத்தார்.
அதன் பிறகு எனது நண்பரை மட்டும் ஜீப்பில் ஏற்றினார். அப்போது அங்கு ஏராளமானோர் கூடி விட்டனர். சப்-இன்ஸ்பெக்டர் அவர்களிடம் இவரால் இந்த பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே அழைத்துச் செல்கிறேன் என்றார் என்று தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் குறித்து வர்கீஸ் கூறுகையில்,
தரமணி பகுதியில் குற்றங்களை தடுப்பதற்காக நடவடிக்கை எடுத்து வருகிறேன். 15 ஜோடிகளை இந்தப் பகுதியில் இருந்து அப்புறப்படுத்தியிருக்கிறேன். கத்தி முனையில் நகை பறிப்பு, மிரட்டல் போன்றவற்றில் இருந்து ஜோடிகளை பாதுகாப்பதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்தேன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications