ரயில்களுக்கு இனிமேல் 5 இலக்க எண்கள்!

இப்போது ரயில்களுக்கு 3, 4 இலக்க எண்களும், சில ரயில்களுக்கு ஆங்கில எழுத்துக்களுடன் கூடிய எண்களும் (alphabetical-numerical combination) உள்ளன. இவை அனைத்தும் இனி 5 இலக்க எண்களாக மாற்றப்படவுள்ளன.
எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட், சதாப்தி, துரந்தோ, ராஜதானி, கரீப் ரத், சிறப்பு ரயில்கள், மெயில்கள் என அனைத்து ரயில்களின் எண்களும் இனிமேல் ஐந்து இலக்கங்கள் கொண்டதாக இருக்கும்.
இந்தியாவில் ரயில்களின் எண்ணிக்கை 10,000த்தைத் தாண்டிவிட்டதால் 4 இலக்க எண்கள் போதுமானதாக இல்லை. இதனாலேயே 5 இலக்க எண்கள் அறிமுகப்படுத்தப்படுவதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ரயில்களின் பெயர்களில் மாற்றம் இருக்காது. அதே போல சரக்கு ரயில்களின் எண்களிலும் மாற்றமில்லை.
எண்கள் மாற்றப்படும் முன்பே ரயில்களுக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்தோர், தங்களது டிக்கெட்டின் நிலவரத்தை அறிய ஆட்டோமெடிக் ரயில்வே உதவி மையத்தை இன்டர்நெட்டிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளும்போது, ரயிலின் எண்ணுடன் முதலில் 1 என்ற எண்ணை சேர்க்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழில் ரயில்வே கால அட்டவணை வெளியீடு:
இந் நிலையில் தெற்கு ரயில்வே தமிழில் ரயில்வே கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
தெற்கு ரயில்வே மண்டல அளவில் இந்த ஆண்டுக்கான (2010) கால அட்டவணை ஆங்கிலத்தில் கடந்த ஜூன் 30ம் தேதி வெளியிடப்பட்டது. இந் நிலையில் நேற்று தமிழிலும் ரயில்வே கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே, தென் மத்திய ரயில்வே, தென் மேற்கு ரயில்வே, கொங்கன் ரயில்வே ஆகிய 4 மண்டலத் தகவல்களும் இடம் பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications