சென்னையில் இன்று 2000 விநாயகர் சிலைகள் கரைப்பு: 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
சென்னை: சென்னையில் 10 ஆயிரம் போலீசார் பூடை சூழ 2000 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்பட்டது.
கடந்த 11-ம் தேதி விநாயகர் சதுர்த்தி விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மிழகம் முழுவதும் பல இடங்களில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யப்பட்டு வந்தது. சென்னையில் மட்டும் 1,500 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த 8 நாட்களாக பூஜிக்கப்பட்ட இந்த சிலைகளில் 200 சிலைகளை மட்டும் நேற்று ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்தனர்.
இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் சென்னையில் 767 விநாயகர் சிலைகள் பூஜை செய்யப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.
சூளை கண்ணப்பர் திடல், திருவல்லிக்கேணி பெரிய தெரு, திருவட்டீஸ்வரன் பேட்டை விநாயகர் கோவில், வள்ளுவர் கோட்டம், புளியந்தோப்பு, சிந்தாதிரிப்பேட்டை, கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை பட்டினப்பாக்கம் கடலில் கரைத்தனர்.
இதேபோன்று நீலாங்கரை பல்கலை நகர், எண்ணூர் ராமகிருஷ்ணா நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் ஆகிய இடங்களில் விநாயகர் சிலைகளும் கடலில் கரைக்கப்பட்டன.
சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாகச் செல்லும்போது அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்க 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் விநாயகர் சிலைகளை கடலில் கரைத்தனர்.
சிலைகளை கரைக்கும் போது கடலில் மூழ்குபவர்களை மீட்கும் பணியில் 50-க்கும் மேற்பட்ட நீச்சல் பயிற்சி பெற்ற மீனவ வாலிபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மெரீனா கடற்கரையில் போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணித்து வந்தனர்.