டெல்லி ஜூம்மா மசூதி துப்பாக்கிச் சூடு-மும்பையில் 2 பேர் கைது
இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு அனுப்பிய இ மெயில் தொடர்பாக இவர்களிடம் விசாரிக்கப்பட்டு வருகிறதாம். ஜூம்மா மசூதி சம்பவத்திற்கு தாங்களே பொறுப்பேற்பதாக இந்தியன் முஜாஹிதீன் உரிமை கோரியுள்ளது நினைவிருக்கலாம்.
அந்த இமெயில் மும்பையிலிருந்து அனுப்பப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. மும்பையின் பொரிவிலி பகுதியிலிருந்து அந்த மெயில் வந்தது தெரிய வந்துள்ளது.
டாடா செல்போனைப் பயன்படுத்தி அதிலிருந்து மெயில் அனுப்பியுள்ளனர். போலியான அடையாள அட்டையைக் காட்டி அதற்கான சிம் கார்டைப் பெற்றுள்ளனர்.
சிம் கார்டு வாங்க சமர்ப்பிக்கப்பட்ட முகவரிச் சான்று ஆவணத்தை பரிசோதித்த போலீஸார் அந்த முகவரிக்குச் சென்று பார்த்தபோது அது போலியானது என்பது தெரிய வந்தது. அந்தப் பெயரில் யாரும் வசிக்காதது தெரிய வந்தது.
இந்த நிலையில்தான் 2 பேர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர். அவர்கள் குறித்த விவரத்தை போலீஸார் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவர்களுக்கு துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருவரில் ஒருவர் பழைய குற்றவாளி என்று சந்தேகிக்கப்படுகிறது.
உள்ளூரைச் சேர்ந்த இந்த பழைய கிரிமினல்களைப் பயன்படுத்தி இந்தியன் முஜாஹிதீன் அமைப்பு பயமுறுத்தும் வகையில் இந்த தாக்குதலை அரங்கேற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.