அனைத்துக் கட்சிக் குழுவின் ஜம்மு பயணத்தைப் புறக்கணித்த பாஜக, எஸ்.பி
காஷ்மீர் கலவரத்தை ஒடுக்கி மீண்டும் அமைதி திரும்பச் செய்வதற்கான முயற்சியாக அங்கு ப.சிதம்பரம் தலைமையில் அனைத்துக் கட்சிக் குழு சென்றுள்ளது.
இன்று அக்குழுவினர் ஜம்மு சென்றனர். ஆனால் இதை மாநில பாஜக, சமாஜ்வாடிக் கட்சி, ஜம்மு காஷ்மீர் தேசிய பேந்தர்ஸ் கட்சி ஆகியவை புறக்கணித்தன. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாமல் அனைத்துக் கட்சிக் குழு ஜம்முவுக்கு சென்றது. அங்கு கிட்டத்தட்ட 30 கட்சிகள், அமைப்புகள், மத அமைப்புகள் உள்ளிட்டவற்றின் பிரதிநிதிகளை குழுவினர் சந்தித்துப் பேசினர்.
புறக்கணிப்பு குறித்து பாஜக தலைவர் ஷாம்ஷெர் சிங் மன்ஹாஸ் கூறுகையில், ஆர்.எஸ்.எஸ்., விஎச்பி, பானுன் காஷ்மீர் போன்ற பல்வேறு 16 தேசியவாத அமைப்புகளை அழைக்க மத்திய அரசு தவறி விட்டது. இதனால்தான் ஜம்மு பயணத்தை நாங்கள் புறக்கணித்தோம் என்றார்.
பாஜக செய்தித் தொடர்பாளர் பல்பீர் ராம் கூறுகையில், 16 அமைப்புகளுக்கு மத்திய அரசு அழைப்பு விடுக்கவில்லை என்றார்.
கிலானியை சந்திக்க நாங்கள் விரும்பவில்லை-சுஷ்மா:
காஷ்மீர் சென்றுள்ள அனைத்துக் கட்சிக் குழுவிலிருந்து எச்சூரி தலைமையில் ஐந்து பேர் கிலானியையும், அதேபோல மீர்வைஸ் உசேன், யாசின் மாலிக் ஆகியோரை தனித் தனிக் குழுக்களும் சென்று சந்தித்தன.
ஆனால் இது அந்தக் குழுவினரின் தனிப்பட்ட பயணம் என்று கூறியுள்ளார் சுஷ்மா சுவராஜ். இதுகுறித்து அவர் கூறுகையில், பிரிவினைவாத தலைவர்களை சந்திப்பது என்பது ஒருமித்த கருத்து அல்ல. அவர்களை சந்திக்க விரும்பியோர் தனியாக போய் சந்தித்துள்ளனர். நாங்கள் போக விரும்பவில்லை, எனவே போகவில்லை என்றார்.
ஆனால் இது ஒருமித்த முடிவின் அடிப்படையில்தான் மேற்கொள்ளப்பட்டதாக எச்சூரி கூறியுள்ளார். அவர் கூறுகையில், நாங்கள்தான் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்று கூறியிருந்தோம். இது எங்களது ஐடியாதான். இதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதிகாரப்பூர்வமாக, முறைப்படி தூதுக் குழுவின் சார்பாகத்தான் நாங்கள் சென்றோம் என்றார்.