வங்கதேசம் வழியே குவியும் சீன பட்டாசு: கவலையில் சிவகாசி
சிவகாசி: தீபாவளி நெருங்கும் நிலையில் சீனாவில் இருந்து வங்கதேசம் வழியாக பட்டாசுகள் இந்தியாவுக்குள் அதிகளவில் வருவதால் சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
தீபாவளி நெருங்கிக் கொண்டிருக்கிறது. சிவகாசியில் பட்டாசுத் தயாரிப்பு முழு வீச்சில் நடைபெறுகிறது. ஆனால் செல்போன், பொம்மை உள்பட நமது தரமான தயாரிப்புக்களுக்கு போட்டியாக சட்ட விரோதமாக நம் நாட்டுக்குள் குவியும் சீன பொருட்கள் பட்டியலில் பட்டாசும் சேர்ந்து விட்டது.
வங்க தேசம் வழியாக சீன பட்டாசுகள் போலி பில் போட்டு வட மாநிலங்களை ஆக்கிரமித்து வருகின்றன. அங்கிருந்து தென்மாநிலங்களுக்கும் அனுப்பத் தயாராகி வருகின்றன.
வெளிநாட்டு பட்டாசுகளை விற்க ஏற்கனவே தடை உள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன் விருதுநகர் எம்.பி. மாணிக்க தாகூர் சிவகாசி பட்டாசு ஆலை அதிபர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்றார்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, வர்த்தக அமைச்சர் ஆனந்த் சர்மா ஆகியோரை சந்தித்து சீன பட்டாசுகளை விற்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தினார். அப்போது சீன பட்டாசுகளை விற்க அனுமதிக்க மாட்டோம் என அரசு உறுதி அளித்தது.
இந்நிலையில் மீண்டும் சீன பட்டாசுகள் வடமாநிலங்களில் தங்கு தடையின்றி வி்ற்கபடுவதாகவும், அதனால் பெரும் நஷ்டம ஏற்படும் என்றும் சிவகாசி பட்டாசுத் தயாரிப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.