காமன்வெல்த் போட்டியிலிருந்து ஆஸி., இங்கிலந்து வீரர், வீராங்கனைகள் விலகல்
மெல்போர்ன்: பாதுகாப்பு மற்றும் உடல்நிலையைக் காரணம் காட்டி ஆஸ்திரேலியா, இங்கிலாந்தைச் சேர்ந்த முன்னணி தடகள வீரர், வீராங்கனைகள் சிலர் காமன்வெல்த் போட்டியிலிருந்து விலகியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த உலக வட்டு எறிதல் வீராங்கனையான டேனி சாமுவேல்ஸ் பாதுகாப்பு மற்றும் உடல் நிலையைக் காரணம் காட்டி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அதேபோல முன்னணி இங்கிலாந்து வீரர்கள் மூன்று பேரும் விலகியுள்ளனர். இவர்களில் 400 மீ்ட்டர் ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக் சாம்பியனான கிறிஸ்டைன் ஓரோஜனும் அடக்கம். கிறிஸ்டைன் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இதேபோல காமன்வெல்த் 1500 மீட்டர் சாம்பியன் லிசா டொபிரிஸ்கியும் காயம் காரணமாக விலகுவதாக அறிவித்துள்ளார். அதேபோல டிரிபிள் ஜம்ப் உலக சாம்பியனான பிலிப்ஸ் இடோவுவும் விலகியுள்ளார். போட்டிஏற்பாடுகள் அதிருப்தி அளிப்பதாக கூறி அவர் விலகியுள்ளார்.
ஏற்கனவே உசேன் போல்ட், டேவிட் ருடிஷா உள்ளிட்ட பல வீரர், வீராங்கனைகள் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்காத நிலையில் தற்போது மேலும் பல வீரர், வீராங்கனைகள் விலகியுள்ளது போட்டிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து விலகுமா?
இதற்கிடையே, தனது வீரர்களை டெல்லிக்கு அனுப்பி வைப்பது குறித்து நியூசிலாந்து நாடு மறு பரிசீலனை செய்யவுள்ளதாம். இதுகுறித்து வெள்ளிக்கிழமை இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அந்த நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு, போட்டி நடைபெறும் இடங்களில் காணப்படும் வசதிக்குறைவுள், குளறுபடிகள், ஊழல்கள் என காமன்வெல்த் போட்டி பெரும் சர்ச்சையாகியிருப்பதே இதற்குக் காரணம் என்கிறது நியூசிலாந்து தரப்பு.