எல்டிடிஇ மீதான தடையை நீக்க வைகோ வாதம்-டெல்லி டிரிப்யூனல் நிராகரிப்பு
சென்னை: விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ டெல்லி சிறப்பு தீர்ப்பாயத்தில் செவ்வாய்க்கிழமை வாதிட்டார். ஆனால் அவரது வாதத்தை டிரிப்யூனல் நிராகரித்து விட்டது.
புலிகள் மீதான தடையை மத்திய அரசு நீட்டித்து இருப்பதையும், அதை உறுதிபடுத்தி தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டதை அங்கீகரிப்பது குறித்தும் முடிவு எடுக்க அமைக்கப்பட்டுள்ள டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென்னின் தீர்ப்பாயத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
இதில், வைகோ நேரில் ஆஜராகி புலிகள் மீதான தடையை நீட்டிக்க எதிர்ப்புத் தெரிவித்து வாதிட்டார்.
ஆனால், அவர் தன் தரப்பு வாதங்களை எடுத்துக் கூற மத்திய அரசு வழக்கறிஞர் எதிர்ப்புத் தெரிவித்தார். தடை செய்யப்பட்ட அமைப்பின் பிரதிநிதிகள் தான் கருத்துக் கூற முடியும் என்றும், மற்றவர்கள் இதில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து வைகோ இதில் ஆஜராக முடியாது என்று நீதிபதி கூறி விட்டார். பின்னர் வழக்கு வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.