16 பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் கதி என்ன?
கொழும்பு: புதுவை ரத்தினதுரை, யோகி உள்பட விடுதலைப் புலிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியவில்லை என்று அவர்களின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
'இலங்கை போரில் கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு' முன்பாக சாட்சியமளிக்கும் நிகழ்ச்சி வட இலங்கையின் வன்னி மற்றும் கிளிநொச்சியில் நடந்து வருகிறது.
இந்த குழு முன்பாக ஆஜரான தமிழ்ப் பெண் ஒருவர் கூறுகையில், "என்னுடையை மகள், அவருடைய கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளும் வட்டுவாகலில் ஐந்தாம் மாதம் வண. பிரான்சிஸ், றெஜினோல்ட் ஆகிய இருபாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க ராணுவத்தினரிடம் சரணடைந்தார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் வட்டுவாகலில் இருந்து பதினாறு பஸ்களில் முல்லைத்தீவு சாலை வழியாக ஏற்றிச் செல்லப்பட்டனர். இதை நான் நேரடியாகவும் பார்த்தேன்.
இன்று அவர்கள் எங்கேயென்று தெரியாது. சகல தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளிலும் தேடிப்பார்த்தேன். எங்குமே இல்லையெனப் பதிலளிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினரோடு ஏற்றிவிட்ட பாதிரியார்களும் இன்று எங்கேயெனத் தெரியாதென அவர்களது குடும்பத்தவர்கள் தெரிவித்துவிட்டனர்," என்றார்.
கிருஷ்ணபாலன் ஜெயபாரதி என்ற பெண்மணி கூறுகையில், தமக்கு மூன்று பிள்ளைகள் இருப்பதாகவும் குறித்த இரு பாதிரியார்களின் வேண்டுகோளுக்கிணங்க புதுவை இரத்தினதுரை, யோகி ஆகியோருடன் தன்னுடைய கணவரும் ராணுவத்திடம் சரணடைந்ததாகவும் அவரும் இப்போது எங்கிருக்கின்றார் எனத் தெரியாதென்றும் கூறினார்.
இதற்கு ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவரும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களா என வினவினர். இதற்கு அவர் ஆம் என்று பதிலளித்ததைத் தொடர்ந்து இது தொடர்பாக தாம் கவனத்தில் கொள்வதாக ஆணைக்குழு தெரிவித்தது.
நிரந்தரத் தீர்வு வேண்டும்!
இந்த ஆணைக் குழு முன்பாக கிளிநொச்சி மாவட்ட மக்கள் சாட்சியம் அளிக்கையில், "இலங்கை வரலாற்றில் ஒவ்வொரு காலகட்டத்திலும் இடம்பெற்ற இனக் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களுடைய உணர்வுகளின் வெளிப்பாடே நடந்து முடிந்த ஆயுதப் போராட்டம். இதில் இரு தரப்புகளுக்கும் இழப்புகள் உண்டு. எனவே எமது அடுத்த சந்ததியும் ஆயுதம் ஏந்தாத வகையில் தமிழ் மக்களுக்கான நிரந்தரமான அரசியல் தீர்வு ஒன்றை ஏற்படுத்தவேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர்.
மீள்குடியேற்றம் என்ற பெயரில் மக்கள் தமது சொந்த இடங்களில் கொண்டு சென்று விடப்படுகின்றனர். ஆயினும் முன் போல சுமுகமான வாழ்க்கை முறைக்கு மக்கள் இன்றுவரை திரும்பவில்லை. குடியிருக்கும் வீடு, விவசாய நிலம், போரினால் இறந்துபோன, காணாமல்போன குடும்பங்களின் வாழ்வாதார நிலைமை என பல பிரச்சினைகளுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. முகாம்களிலும் சிறைகளிலும் வைக்கப்பட்டோர் குறிதது என்ன நிலைப்பாட்டை அரசு கொண்டுள்ளதென்பதைத் தெளிவுபடுத்தவேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
"எங்களுடைய பிள்ளைகள் இருக்கின்றார்களா? இல்லையா? என்பதையாவது கூறவேண்டும்" என்று முன்னாள் போராளிகளின் தாய்மார்கள் கேட்டுக்கொண்டனர்.
எங்கே என் கணவர் எழிலன்?
இந்நிலையில் நல்லிணக்கக் குழு முன்பு ஆஜாரான விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியற்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன், தன்னுடைய கணவர் எழிலன் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைவதை தான் கண்டதாகவும், அதன் பின்னர் அவர் குறித்து எவ்வித தகவலும் இல்லை என கூறியுள்ளார்.
அதே போன்று இன்னும் பல நூறு போராளிகளும் சரண் அடைந்ததாகவும் அவர்களையும் தனது கணவரையும் இந்த குழு கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.