மதுரையில் ஜெ. தலைமையில் ஆர்ப்பாட்டம்-பூஜை போட்ட அதிமுகவினர்
மதுரை: மதுரையில் ஜெயலலிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் மேடை போடுவதற்கான பூமி பூஜை இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.
அதிமுக சார்பில் கோவை மற்றும் திருச்சியில் திமுக அரசை கண்டித்து நடத்திய ஆர்பாட்ட பொதுக் கூட்டத்திற்கு ஏராளமான அதிமுகவினர் குவிந்ததை அடுத்து மதுரையிலும் அதிமுக சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என அதன் தலைமை அறிவித்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த ஆர்பாட்டம் தள்ளிப்போனது.
மதுரையில் ஆர்பாட்டம் நடத்தினால் குண்டு வைத்து கொலை செய்வோம் என மிரட்டல் கடிதம் ஜெயலலிதா வீட்டிற்கும், ஜெயா டிவி அலுவலகத்திற்கும் சென்ற சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஜெயலலிதாவுக்கு பாதுகாப்பு கோரி அதிமுக முக்கிய நிர்வாகிகள் பிரதமர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இந்நிலையில் மக்கள் நலனில் அக்கறை இல்லாத திமுக அரசின் போக்கை கண்டித்து அடுத்த மாதம் 18-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று அதிமுக அறிவித்துள்ளது.
இதையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை அதிமுகவினர் முழுவீச்சில் செய்து வருகின்றனர். இதற்காக மதுரை விரகனூர் சுற்றுச் சாலையில், பாண்டி கோவிலுக்கு அருகே 60 ஏக்கர் நிலத்தை அதிமுகவினர் வாடகைக்கு எடு்த்திருக்கின்றனர். அந்த இடத்தில் இன்று காலை 9.30 மணி அளவில் பூமி பூஜை நடத்தினர்.
இதில் அதிமுக பொருளாளர் ஓ. பன்னீர்செல்வம், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், செங்கோட்டையன், 6 அதிமுக எம்.எல்.ஏக்கள், 6 முன்னாள் எம்.பிக்கள், 9 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் 5 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், புரட்சித் தலைவி தலைமையில் நடக்கும் இந்த பொதுக்கூட்டம் வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும். 50 லட்சம் பேர் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.
கூட்டத்திற்கான ஏற்பாடுகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன என்றார்.
திருச்சி, கோவை ஆர்ப்பாட்டத்தை விட மதுரையில் பிரமாண்டமாக நடத்த வேண்டும் என்ற மேலிட உத்தரவின்படி ஆர்ப்பாட்டத்திற்கு ஆள் சேர்ப்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனவாம்.