அயோத்தி தீர்ப்பு: அமைதியுடன் இருந்து மத நல்லிணக்கத்தைக் காப்போம்-ஸ்ரீஸ்ரீரவிசங்கர்
டெல்லி: அயோத்தி தீர்ப்பு எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதுகுறித்து கோபப்படாமல், அமைதி காத்து இந்துக்களும், இஸ்லாமியர்களும் சகோதரத்துவத்தை காக்கும் வகையில் செயல்பட்டு, அமைதி காத்து மத நல்லிணக்கத்தை காக்க வேண்டும் என்று வாழும்கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், செப்டம்பர் 24ம் தேதி வெளியாகும் தீர்ப்புக்குப் பின்னர் அனைவரும் அமைதி காக்க வேண்டும். சுய கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். யார் மீதும் துவேஷமோ, ஆவேசமோ காட்டக் கூடாது. அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து மத நல்லிணக்கத்தைக் காக்க வேண்டும் என்றார்.
அதே நிகழ்ச்சியில் பேசிய அகில இந்திய இமாம்கள் சங்க பொதுச் செயலாளர் உமைர் இலியாசி கூறுகையில், தீர்ப்பு வெளியான பின்னர் அதைக் கொண்டாடாமல் அல்லது துக்கம் அனுஷ்டிக்காமல், அமைதியுடன் இருக்குமாறு, முஸ்லீம் சகோதரர்களை கேட்டுக் கொள்ள வேண்டும் என நாடு முழுவதும் உள்ள ஐந்து லட்சம் மசூதிகளின் இமாம்களை நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.
அமைதி-அமெரிக்க இந்துக்கள் கோரிக்கை:
இந்தியாவில் உள்ள அனைத்து இந்துக்களும், முஸ்லீம்களும் ஒற்றுமையுடனும், அமைதியுடனும் இருந்து மத நல்லிணக்கத்தை கட்டிக் காக்க வேண்டும் என்று அயோத்தி தீர்ப்பு தொடர்பாக அமெரிக்கா வாழ் இந்துக்ள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அமெரிக்காவிலுள்ள ஹிந்து அமெரிக்கன் பவுண்டேஷன் நிறுவனர்களில் ஒருவரான மிஹிர் மெகானி கூறுகையில்,
அயோத்தி தீர்ப்பின் மூலம் சர்ச்சைக்குரிய இட பிரச்னை தீர்ந்துவிடும். தீர்ப்பு எல்லோரையும் திருப்திபடுத்த இயலாமல் போகலாம். இந்த விஷயத்தில் மதத் தலைவர்கள் சிறப்பாக செயல்பட்டு பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
அமைதி, மத நல்லிணக்கம் ஏற்பட ஹிந்து, முஸ்லிம்கள் ஒத்துழைக்கவேண்டும். ஒருவரது மத நம்பிக்கைகளை மற்ற மதத்தினர் மதிக்கவேண்டும் என்றார்.