4 மாவட்டங்களில் விரைவில் புதிய பயிர் காப்பீட்டுத் திட்டம்: அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்
தென்காசி: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் புதிய பயிர் காப்பீ்ட்டுத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது என்று குற்றாலத்தில் நடந்த விழாவில் வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தெரிவித்தார்.
வேளாண்மைத் துறை சார்பில் குற்றாலத்தில் ரூ.5.92 கோடி செலவில் அமைய உள்ள தோட்டக்கலைத் துறை பூங்கா அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.
அப்போது அவர் பேசியதாவது,
குற்றாலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் சாப்பிடவும், குளிக்கவும் மட்டுமே முடியும் என்ற நிலை இருந்தது. தற்போது ரூ.5 கோடியே 92 லட்சம செலவில் தோட்டக்கலை துறை சார்பில் இந்த பழத்தோட்ட பண்ணையில் இருந்து 36.78 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்காவை உருவாக்கி இருக்கிறோம்.
இந்த நிதி போதாது என்பதால் பாராளுமன்ற உறுப்பினர் தங்கவேலு, லிங்கம் ஆகியோர் தலா ரூ.10 லட்சம் நிதி ஓதுக்கீடு அளிப்பதாக உறுதியளித்துள்ளனர். இந்த பூங்கா திட்டப் பணிகளை 7 மாதத்தில் முடித்து விடுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் 6 மாதத்திலேயே முடித்துத் தருவார்கள் என்று நம்புகிறேன்.
மேலும் வேளாண்மைத் துறையில் நமது நீண்ட நாள் கோரி்க்கையான பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் சில மாற்றங்களை கொண்டுவர மத்திய அரசு சம்மதித்துள்ளது. இதன்படி கடலூர், சிவகங்கை, நாமக்கல் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பரீட்சார்ந்த முறையில் விரைவில் புதிய காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்றார் அவர்.