தீபாவளி சிறப்பு ரயில்கள்-முக்கால் மணி நேரத்தில் நிரம்பின-பயணிகள் ஏமாற்றம்
நவம்பர்5ம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து சென்னையிலிருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கோவை உள்ளிட்ட நகரங்களுக்கான வழக்கமான ரயில்கள் அனைத்தும்ஏற்கனவே நிரம்பி விட்டன.
இந்த நிலையில் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்தது. அதன்படி சென்னையிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், கோவை, திருச்சி, செங்கோட்டை, எர்ணாகுளம் ஆகிய ஊர்களுக்கு சிறப்பு ரயில் விடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கான முன்பதிவு நேற்று காலை தொடங்கியது. ஆனால் தொடங்கிய 20 நிமிடத்திற்குள் தென் மாவட்டங்களுக்கான சிறப்பு ரயில்கள் நிரம்பி விட்டன. அடுத்த 25 நிமிடத்தில் கோவை உள்ளிட்ட ஊர்களுக்கான ரயில்களும் ஃபுல் ஆகி விட்டன.
இந்த ரயில்களில் எப்படியும் இடம் பிடித்து விட வேண்டும் என்பதற்காக அதிகாலையிலேயே கியூ வரிசையில் நிற்க ஆரம்பித்த பலருக்கும், டிக்கெட் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பெரும் ஏமாற்றத்தை சந்தித்தனர்.
மேலும் சில கூடுதல் ரயில்களை விட வேண்டும் என்று தீபாவளிக்காக சொந்த ஊர் செல்ல காத்திருக்கும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.