ஜெ. ரூ. 2 கோடி பரிசு வழக்கு: தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு பிறந்த நாள் பரிசாக வந்த ரூ. 2 கோடி தொடர்பான வழக்கிற்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டு முதல் 96-ம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்தார். 1992-ம் ஆண்டு அவருக்கு பிறந்தநாள் பரிசாக ரூ. 2 கோடி மதிப்புள்ள 57 வங்கி டிமாண்ட் டிராப்டுகள் வந்தது. அதை அவர் அரசு கஜானாவில் போடாமல், தனது சொந்த வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்தார் என்று புகார் எழுந்தது.
இது பற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். ஜெயலலிதா மீதும், இதற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீதும் சென்னை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
ஜெயலலிதாவும், மற்ற 2 பேரும் வேண்டுமென்றே காலத்தைக் கடத்துவதாகவும், அதனால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் தேதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் சி.பி.ஐ. மனுதாக்கல் செய்தது.
இதற்கிடையே ஜெயலலிதா தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது,
என் மீது சுமத்தப்பட்டுள்ள புகார்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஊழல் தடுப்பு சட்டம் 13(2), 13(1)(இ) ஆகிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக அரசுக்கு எந்த வித அதிகாரமும் இல்லை.
இதற்காக மத்திய அரசும், தமிழக அரசும் வெளியிட்ட அறிவிப்பில் ஊழல் தடுப்பு சட்டம் 13(2), 13(1)(இ) பிரிவின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், சி.பி.ஐ. இந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யாமல், ஊழல் தடுப்புச் சட்டம் 11 வது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இது சட்டத்திற்கு புரம்பான செயலாகும்.
கடந்த 1996-ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 10 ஆண்டுகளுக்குப் பிறகு தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இத்தனை காலம் தாமதம் ஏற்பட்டதற்கு விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால் நான் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஊழல் தடுப்பு சட்டம் 11 வது பிரிவின் கீழ் வழக்கு தொடர்ந்தது முறையன்று. அப்போது நான் முதலமைச்சராகவும், அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்தேன்.
என் மீது இருக்கும் அன்பினால் கட்சி உறுப்பினர்கள் அளித்த பரிசுகள் ஊழல் தடுப்பு சட்டம் 11 வது பிரிவின் கீழ் வராது. ஒரு சிலரை மரியாதை நிமித்தமாக பணியில் நியமித்ததற்கும், எனக்கு அளிக்கப்பட்ட பரிசுக்கும் தொடர்பில்லை, தொடர்புபடுத்தவும் முடியாது.
என் மீது வழக்கு தொடர சபாநாயகருக்கு அனுமதி அளித்தது செல்லாது. எனவே, இந்த காரணங்களினால் என்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் அலி, பிறந்த நாள் பரிசு வழக்கிற்கு தடை விதிக்க முடியாது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications