திமுக ஆட்சியில் துர்ப்பாக்கிய நிலையில் ஏழை, எளிய மக்கள்: ஜெயலலிதா
சென்னை: கடன் வாங்கி, வீடு கட்டி, வாங்கிய கடனுக்கு மேல் வட்டியும் செலுத்திவிட்டு, அந்த வீடும் அவர்கள் கண்ணெதிரே ஏலம் போகக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமை திமுக ஆட்சியில் ஏழை, எளிய மக்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கூட்டுறவு சங்கங்கள், நிலவள வங்கிகளில் வாங்கிய வீட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்தாத விவசாயிகள், நெசவுத் தொழிலாளர்களின் சொத்துக்களை ஜப்தி செய்வது, ஏலம் விடுவது போன்ற செயல்களை அரசு உடனே கைவிட வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் நிலவும் கடுமையான மின்வெட்டு மற்றும் தவறான பொருளாதார கொள்கைகள் காரணமாக வேளாண் தொழிலும், நெசவுத் தொழிலும் நலிவடைந்து வருகின்றன. இதன் காரணமாக, விவசாயிகளும், நெசவுத் தொழிலாளர்களும் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் மற்றும் நிலவள வங்கிகளின் மூலம் வீடு கட்ட தாங்கள் வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
80,000 ரூபாய் முதல் 2,00,000 ரூபாய் வரை வாங்கிய கடனுக்கு, 3,00,000 ரூபாய் முதல் 4,00,000 ரூபாய் வரை திருப்பி செலுத்தியுள்ளதாகவும், இருப்பினும் தற்போதுள்ள நிலுவைத் தொகை வாங்கிய கடனை விட இரண்டு மடங்கு அதிகரித்து இருப்பதாகவும்; இதற்காக ஜப்தி, ஏலம் போன்ற நடவடிக்கைகளை திமுக அரசு எடுத்திருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது மட்டுமல்லாமல், பணத்தை செலுத்தச் சொல்லி தினம், தினம் தாங்கள் அவமானப்படுத்தப்படுவதாகவும், ரவுடிகளால் மிரட்டப்படுவதாகவும், ஏலம் எடுப்பதற்கும், வீட்டு உரிமையாளர்களை வெளியேற்றுவதற்கும் வெளியூர்களில் இருந்து ஆட்களை கூட்டுறவு வீட்டு வசதி சங்க அலுவலர்கள் அழைத்து வருவதாகவும் ஏழை, எளிய மக்கள் தெரிவிக்கின்றனர்.
கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்றவர்கள் அனைவரும் ஏழை, எளிய விவசாயிகள், நெசவுத் தொழிலாளர்கள் மற்றும் நலிவடைந்த மக்கள்.
கடன் வாங்கி, வீடு கட்டி, வாங்கிய கடனுக்கு மேல் வட்டியும் செலுத்திவிட்டு, அந்த வீடும் அவர்கள் கண்ணெதிரே ஏலம் போகக்கூடிய துர்ப்பாக்கிய நிலைமை ஏழை, எளிய மக்களுக்கு இந்த திமுக ஆட்சியில் ஏற்பட்டு இருக்கிறது.
கருணாநிதிக்கு ஏழை, எளிய மக்கள் மீது அக்கறை இருந்து இருக்குமேயானால், ஜப்தி நடவடிக்கையை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டு, அசலை மட்டும் ஏழை, எளிய மக்கள் செலுத்தி, அடமானப் பத்திரங்களை பெறும் ஒரு வாய்ப்பினை உருவாக்கித் தந்திருக்க வேண்டும்.
ஆனால், அதைச் செய்யாமல், ஜப்தி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறார்.
இது போன்ற மனிதாபிமானமற்ற செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஜப்தி நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலலிதா.












Click it and Unblock the Notifications