ஓட்டு போட காசு வாங்காதீர்கள்: ராமதாஸ்
கும்மிடிப்பூண்டி: தமிழ்நாட்டில் சமூக மாற்றம் உருவாக வேண்டுமென்றால் பொதுமக்கள் ஓட்டுக்கு காசு வாங்கக்கூடாது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான பாமக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பயிற்சி முகாமில் பேசிய அவர்,
வன்னியருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு 1980ல் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 5,000 பேர் கலந்து கொண்டனர். துப்பாக்கி சூடு கூட நடைபெற்ற அந்த போராட்டத்தின்போது 100க்கும் மேற்பட்டவர்கள் சிறை சென்றனர். அந்த வகையில் பா.ம.க. வரலாற்றில் கும்மிடிப்பூண்டி மறக்க முடியாத இடம்.
நாம் 2011ல் ஆட்சிக்கு வரப்போகிறோம் என்றால் எல்லோருக்கும் கோபம் வருகிறது. ஆட்சி நடத்தும் கட்சிகளின் நோக்கம் எல்லோரும் குடிக்க வேண்டும் என்பது தான்.
டாஸ்மாக் கடைகள் பெருகிவிட்டதால் பள்ளிக்கூட மாணவர்களும் மது குடிக்கிறார்கள். இன்னும் 5 வருடத்தில் குடிக்காத இளைஞர்களே இல்லை என்ற நிலைமை உருவாகப் போகிறது.
2011ல் தமிழ்நாடு எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று விவசாயம், கிராம வளர்ச்சி, இளைஞர்களின் மறுமலர்ச்சி, தமிழ் வளர்ச்சி இவற்றுக்கு எல்லாம் பாமகதிட்டம் போட்டிருக்கிறது. அதனை வல்லுனர்கள் எல்லாம் பாராட்டுகிறார்கள். அதை நிறைவேற்ற பாமக தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் பெண்கள் விதவைகளாக உள்ளனர். மதுக்கடை வேண்டாம் என்று கன்னியாகுமரியில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை நான்தான் கேட்டு வருகிறேன்.
நாட்டில் பல்வேறு புரட்சிகள் இருந்தது. தற்போது சாராய புரட்சி, ரியல் எஸ்டேட் புரட்சி நடக்கிறது.
ஆட்சி நடத்தியவர்கள், ஓட்டுப் போடும் ஜாதியாக மட்டுமே வன்னிய ஜாதியை வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சமூக மாற்றம் உருவாக வேண்டுமென்றால் பொதுமக்கள் ஓட்டுக்கு காசு வாங்கக்கூடாது. பாமக அரசியல் திட்டமே குடும்பத்தில் ஒருவருக்கு அரசு அல்லது தனியார் வேலை என்பது தான் என்றார் ராமதாஸ்.