அடிக்கடி தண்டவாள விரிசல்: மதுரை-கன்னியாகுமரி வரை ஆய்வு
நெல்லை: மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரை தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக் கிஷன் தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று தண்டவாள உறுதித் தன்மை குறித்து ஆய்வு நடத்தினர்.
தென்னக ரயில்வேயில், இந்தப் பாதையில், சமீப காலமாக அடிக்கடி தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் ரயில் சேவையில் தாமதம் ஏற்படுவதால் பயணிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். தண்டவாள விரிசலால் பயண பாதுகாப்பில் கேள்விகுறி ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக குமரி-சென்னை வழித்தடத்தில் கார்டுலைன் என்று அழைக்கப்படும் மதுரை, திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் பாதையில் அதிகளவில் ரயி்ல்கள் இயக்கப்படுவதால் தான் விரிசல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே அத்தகைய தண்டவாளங்களை மாற்ற ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மேலும் தண்டவாளம் வெயில் மற்றும் மலைக்காலங்களில் சுருங்கி விரியும் தன்மை கொண்டது.
எனவே, விரிசலை உடனுக்குடன் கண்டுபிடிக்க இரவு நேர தண்டவாள ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தென்னக ரயில்வே பொது மேலாளர் தீபக் கிஷன் தலைமையிலான அதிகாரிகள் குழு நேற்று மதுரையில் இருந்து குமரி வரை ஆய்வு நடத்தியது. மதுரையில் காலை 9.20 மணிக்கு சிறப்பு ரயிலில் புறப்பட்ட அதிகாரிகள் குழு கோவில்பட்டி, மணியாச்சி உள்ளிட்ட பகுதிகள் ஆய்வு நடத்தியது. தொடர்ந்து நெல்லை வந்த ஆய்வுக் குழுவினர் இங்கு நடந்து வரும் மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டனர்.