தஞ்சை அரண்மனையில் இடி தாக்கி விரிசல்-அதிகாரிகள் அதிர்ச்சி
தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் நிறைவுபெற்றதை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தஞ்சை அரண்மைனை இடி தாக்கி விரிசல் ஏற்பட்டுள்ளது.
மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய பெரிய கோவிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா நேற்று தொடங்கியது. வரும் 26-ம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடக்கின்றது. இதனால் தஞ்சை நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில் தஞ்சையில் பெய்த கன மழையின்போது அங்குள்ள அரண்மனையில் இடி விழுந்தது. இதில் அரண்மனைச் சுவரில் மூன்று இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இங்கு தான் சோழ மன்னர்களின் பொருட்கள் கண்காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை இன்று துணை முதல்வர் மு. க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
இந்த நிலையில், கண்காட்சி சமயத்தில் அரண்மனைச் சுவரில் விரிசல் ஏற்பட்டிருப்பதால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஆராயப்பட்டு வருகிறது.