போலீஸ் வேனை தாறுமாறாக ஓட்டி கவிழ்ந்த பெண் போலீஸ் கைது!
சென்னை: சென்னை மெரீனா கடற்கரையில் பெண் போலீஸ் ஓட்டிய போலீஸ் வேன் தாறுமாறாக ஓடி கார், மோட்டார் சைக்கிள், பஸ் ஆகியவை மீது மோதி கவிழ்ந்தது. இதையடுத்து அந்த பெண் போலீஸ் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஆயுதப்படை போலீசில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் ரமா, வேன் ஓட்டும் பணி செய்து வந்தார்.
அடையாறு பகுதியில் இருந்து ரமா வேனை ஓட்டி வந்தார். இந்த வேன் மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் தாறுமாறாக ஓடி கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை இடித்து தள்ளிவிட்டு மாநகர பஸ் மீதும் மோதியவிட்டு கவிழ்ந்தது.
வேனுக்குள் ரமாவும் சிக்கிக் கொண்டார். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் போக்குவரத்து போலீசார் கவிழ்ந்து கிடந்த வேனுக்குள் சிக்கியிருந்த பெண் போலீஸ் ரமாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதே போல காரை ஓட்டி வந்து காயமடைந்த சீனிவாசன், மோட்டார் சைக்கிளில் வந்த யாதவன் ஆகியோரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமாவை சிகிச்சைக்குப் பின் கைது செய்தனர்.
வழிப்பறி பணம்-வாலிபரை கொன்ற ஆட்டோ டிரைவர்கள்:
வழிப்பறி செய்த பணத்தை பங்கு போடுவதில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை கொலை செய்த 3 ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
சென்னை வில்லிவாக்கம் ஐ.சி.எப். கக்கன்ஜி காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ் (22) கோயம்பேட்டில் ஆட்டோ ஓட்டி வந்தார்.
இவரும் ஆட்டோ டிரைவர்களான மணிகண்டன், வடிவேலு, விஜயகாந்த்.ஆகியோர் குடித்துவிட்டு சீட்டு விளையாடுவது,
ராஜேஷ் என்பவருடன் சேர்ந்து ஐ.சி.எப். பகுதியில் வழிப்பறி செய்வது வழக்கம்.
கடந்த 5ம தேதி இரவு வில்லிவாக்கம் பகுதியில் 4 பேரும் மது அருந்திவிட்டு கொள்ளையடித்த பணத்தை பங்கு போட்டபோது ராஜேசுக்கும் மணிகண்டனுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் மணிகண்டனுடன் சேர்ந்து வடிவேலு, விஜயகாந்த் ஆகியோர் ராஜேசை அடித்து உதைத்ததில் அவர் பலியானார்.
இதையடுத்து உடலை வில்லிவாக்கம் தாதால் குப்பம் பகுதி அருகில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் இவர்கள் வீசினர்.
அந்த வழியாக சென்ற ரயில் பிணத்தின் மீது ஏறி உடல் 2 துண்டானது. ஆனால், பிரேத பரிசோதனையில் ராஜேஷ் அடித்துக் கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து ராஜேஷின் தாயார் தேவி சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் எனது மகன் ராஜேசை கொலை செய்து பிணத்தை தண்டவாளத்தில் வீசி விட்டனர். உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கை தற்கொலை என்று கேஸ் போட்டு மூடிவிட்ட வில்லிவாக்கம் போலீசார் கமிஷனரின் உத்தரவால் மீண்டும் விசாரிக்க ஆரம்பித்தனர்.
இதையறிந்த மணிகண்டன், வடிவேல், விஜயகாந்த் ஆகியோர் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
முதியவர் கொலையில் பிஇ, சட்ட மாணவர்கள் கைது:
சென்னை சேலையூர் கணேஷ்நகரில் வசித்து வந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சிவராமன் (76) கடந்த மே மாதம் வீட்டில் தனியாக இருந்த போது தலையணையால் அமுக்கி படுகொலை செய்யப்பட்டார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி சிவராமனின் அண்ணன் நடரஜானின் பேரன் வெங்கட்ராமனை கைது செய்தனர்.
இந் நிலையில் இந்தக் கொலைக்கு உதவிய கூட்டாளிகள் கிருஷ்ணகுமார், எழிலரசன், ரஜினி, கணபதி ஆகியோரும் இப்போது கைதாகியுள்ளனர்.
இதில் கிருஷ்ணகுமார் சட்டக் கல்லூரி மாணவர், எழிலரசன் என்ஜினீயரிங் மாணவர் ஆவர்.
5 பேரும் சேர்ந்து சிவராமனை கொலை செய்து விட்டு ரூ.10,000 பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications