ஜெ.வுக்கு மிரட்டல் கடிதம் வந்த வழக்கு-சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு
நேற்று மாலை புனித ஜார்ஜ் கோட்டைக்கு, அதிமுக பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார், பி.எச்.மனோஜ்பாண்டியன் எம்.பி, சேகர்பாபு எம்.எல்.ஏ, செந்தமிழன் எம்.எல்.ஏ. ஆகியோர் வந்தனர்.
தலைமைச் செயலாளர் மாலதி மற்றும் உள்துறை முதன்மை செயலாளர் ஞானதேசிகன் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர்.
அதில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தும், ஜெயா தொலைக்காட்சியை தகர்ப்போம் என்றும், தொடர்ந்து மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி 2 கடிதங்கள் மூலம் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.
தற்போது மேலும் 3 கொலை மிரட்டல் கடிதங்கள் வந்துள்ளன. தமிழக அரசிடமும், பிரதமரிடமும், மத்திய உள்துறை அமைச்சரிடமும் கடிதங்கள் கொடுக்கப்பட்டும், இதுபோன்ற கொலை மிரட்டல் கடிதங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும் போது தமிழக காவல்துறையை கொலை மிரட்டல் கடிதங்கள் விடுப்பவர்களும் மற்றும் அதன் பின்னணியில் உள்ளவர்களும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
நாங்கள் கொடுத்த 7 புகார்களின் மீது காவல் துறையினரால் முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத்துறைக்கு (சி.பி.ஐ.) மாற்றுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறப்பட்டிருந்தது.
இதை ஏற்று தற்போது சிபிஐ விசாரணைக்கு இந்த வழக்கை மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதங்கள் வந்தது தொடர்பாக சென்னை கிண்டி காவல் நிலையத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த திமுக பிரமுகர் முத்துப்பாண்டியன் பெயர் பலமாக அடிபடுகிறது. அவரை சென்னை கிண்டி காவல் நிலையப் போலீஸார் 15 பேர் மதுரை சென்று தீவிரமாக விசாரித்தனர். ஆனால் தனக்கு எழுதவே தெரியாது, இதற்குக் காரணம், முன்பு திமுகவில் இருந்தவரும் தற்போது அதிமுகவில் இருப்பவருமான பசும்பொன் பாண்டியன்தான் காரணம் என்று கூறியுள்ளார் முத்துப்பாண்டியன்.
முத்துப்பாண்டியன் உள்பட 113 பேரிடம் இதுவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது. மதுரையைச் சேர்ந்தவர்கள் தவிர தஞ்சையிலிரும் சிலரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
அதேசமயம், பசும்பொன் பாண்டியனின் மனைவி குடியரசுத் தலைவருக்கு சமீபத்தில் ஒரு புகாரை அனுப்பினார். அதில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியை குற்றம் சாட்டியுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதம் வந்தது தொடர்பாக சமீபத்தில் 2 முறை பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் அதிமுக எம்.பிக்கள் புகார் கொடுத்தனர். இந்தப் பின்னணியில்தான் தற்போது இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியுள்ளது தமிழக அரசு.